வியாழன், 30 அக்டோபர், 2014

உடைந்துபோன நிலாச்சில்லுகள்...

வில்லும் அம்பும் 
ராம அர்ச்சுனனுக்கு 
==அவளுக்கு கூர்விழி. 

=*=*=*

காண்பதற்கு அழகு 
கரடுமுரடான தூரத்து கிரகம் 
==ஜன்னல் சிறையில் நிலவு. 

=*=*=*

நீண்டிருக்கும் நைல்நதி 
கறுத்திருக்கும் கார்மேகம் 
==காதலிக் கூந்தல். 


=*=*=*

விடியாத உலகம் 
வியாக்கியானத் தவளைகள் 
==பாசிபடிந்த பழைய கிணறு. 


=*=*=*

வைகறை பொழுது 
வாகை மரத்தடி 
==உடைந்துபோன நிலாச்சில்லுகள் 


=*=*=*


எந்த காக்கைக்கூட்டில் 
விளக்கொளியாகியதோ 
==அவளின் வெட்டப்பட்ட நகம். 


-------------நிலாசூரியன்.

சனி, 30 ஆகஸ்ட், 2014

வாடகை வீடு (நிலாசூரியன் சிறுகதை)


வாடகை வீடு (நிலாசூரியன் சிறுகதை) 

இரவு ஒன்பது மணி... 

வீட்டில் எல்லோரும் உணவு முடித்துவிட்டு படுத்திருந்தார்கள். இரவின் மென்மையானத் தழுவலில், செல்வி நன்றாக தூங்கிவிட்டாள். ஈழவேந்தனுக்கு மட்டும் ஏனோத் தூக்கம் வரவில்லை, ஆகையால், அவன் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு இருந்தான். அவனது மனம் கட்டவிழ்ந்த புரவியாய் அதிவேகத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தது. பள்ளிக்கூடம், வகுப்பறை, வகுப்பறைத் தோழர்கள், தோழிகள், விளையாட்டுத்திடல், இப்படியே ஓடிக்கொண்டு இருந்த அந்த மனப்புரவி. கடைசியாக நெல்லி மரத்தையே சுற்றி சுற்றி ஓடிக்கொண்டு இருந்தது. 

என்னங்க..!'' அந்த வீடு நல்லா இருக்குமா..?'' ''ஒன்னும் பிரச்சனை இருக்காதே...?'', என்னய  கூட்டிக்கிட்டுப் போய் காட்டாமலே முன் பணம் குடுத்துட்டு வந்துடிங்க. எதாச்சும் சரி இல்லனா என்ன பண்றது, என்றாள் தனக்கொடி.

அம்மா, அப்பாவிடம் ஏதோ கேட்கிறாள் என்பதை புரிந்துகொண்ட ஈழவேந்தன். நெல்லிமரத்தைச் சுற்றி சுற்றி ஓடிக்கொண்டு இருந்த, மனப்புரவியின் ஓட்டத்தை பட்டென நிறுத்தி, செவியினை கூர்மையாக்கிகொண்டான். 

வீட்டை நான் நல்லா பாத்துட்டேன் தனம். உனக்கு கண்டிப்பா புடிக்கும். ஏற்கனவே அந்த வீட்டுக்கு ரெண்டு மூனுப்பேர் போட்டி போட்டுக்கிட்டு இருக்காங்களாம். ''நீங்க ஒரு மாசத்துக்கு முன்னாடியே சொல்லி வச்சதாலதான் நான் ஒங்ககிட்ட சொல்றேன்,'' ''உடனே முன்பணம் கொடுத்து வீட்டை புடிச்சிகங்க,'' இல்லனா வீடு கை மாறிடும்னு தரகர் சொன்னான். அதான் ஒன்ன கூட்டிக்கிட்டுப்போய் வீட்ட காட்ட முடியாம போயிடுச்சி. நமக்கு தகுந்த மாதிரி வீடு நல்லாவே இருக்கு தனம், நீ ஒன்னும் கவலப்படாத. காலைல வீட்டை காலிப்பண்ணனும் சீக்கிரம் தூங்கு, என்றான் முத்துக்கருப்பன். 

''சரிங்க'', நீங்க சொன்னா சரிதான். ஏதோ மனசுல தோணிச்சி கேட்டுபுட்டேன் அம்புட்டுதான், என்று தன் பேச்சை முடித்தாள் தனக்கொடி. 

அதன் பிறகு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது, ஈழவேந்தன் செவிகளில் நுழையவே இல்லை. ஆனால் நாளைக்கு வீட்டை காலிப்பண்ண போகிறார்கள் என்பது மட்டும் அவன் தெளிவாக புரிந்துகொண்ட அடுத்த கணமே, சோகம் கலந்த தவிப்புகளில் அவன் வேரற்று விழுந்தான். 

கனத்த அவனது மனப்புரவி, காலொடிந்து நெல்லி மரத்தின் கீழ் விழுந்து கிடந்தது. அந்த  மனப்புரவி மெல்ல மெல்ல ஒரு ஆண்டு பின்னோக்கி நகர்ந்தது. 

அவன் இரண்டாம் வகுப்பு படிக்கும்பொழுது, அன்று ஒரு நாள் தமிழாசிரியர் அமிர்தகணேசன், ''மரம் நடுவிழா'' பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். மரத்தால் மனிதனுக்கு கிடைக்கிற நன்மைகளையும். மரம் வளர்ப்பிற்கான அவசியத்தையும். அவர் எடுத்துக் கூறியதை கூர்ந்து கவனித்த ஈழ வேந்தனுக்கு, அப்பொழுதே மரம் வளர்க்க வேண்டுமென்ற ஆசை முளைத்ததுவிட்டது. அந்த ஆசை அன்றைக்கே நிறைவேறியதில் அவன் மிகுந்த மகிழ்ச்சிக் கொண்டான். 

ஆம்...! அன்று உணவு இடைவேளையில் தமிழாசிரியர் அமிர்தகணேசன். வகுப்பு மாணவர்களுக்கெல்லாம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார். ஈழவேந்தனுக்கும் ஒரு நெல்லிமரக் கன்று கிடைத்தது. அதை கொண்டு வந்து தனது வீட்டின் முன்பு குழிதோண்டி நட்டு வைத்து, தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்தான். ஒரு வார காலத்தில் மரமும் நன்றாக வளரத்தொடங்கியது. மரம் வளர வளர, அவனுக்கு மரத்தின்மீது காதலும் வளர்ந்தது. அதன் விளைவு...!'' எப்பொழுதும் அந்த நெல்லிமரத்து அருகில் இருப்பதையே அவன் பெரிதும் விரும்பினான். அவனது மகிழ்ச்சியையும் துன்பத்தையும் அதனோடு அவன், அவனது உணர்வுகளால் பகிர்ந்துகொண்டான். அவன் விளையாடுவதை அது தலையாட்டி ரசிப்பதையும், அவன் பேசுவதை அது கூர்ந்து கேட்பதையும், அவனது சித்த புத்தியால் முழுக்க முழுக்க உணர்ந்து இருந்தான். 

ஈழவேந்தன் தனது தங்கை செல்வியோடு எப்பொழுதும் நெல்லிமரத்து அருகில்தான் விளையாடிக்கொண்டு இருப்பான். வீதிக்குச் சென்று பிள்ளைகளோடு விளையாடுவதை அவன் பெரும்பாலும் விரும்புவதில்லை. 

அன்று ஒரு நாள் செல்வி தின்பண்டம் கேட்டு அழுது அடம் பிடித்துக்கொண்டு இருந்தாள். வீட்டில் எதுவும் இல்லாததால், தனக்கொடியால் அவளுக்குத் தின்ன எதுவும் கொடுக்க முடியவில்லை. எவ்வளவோ சமாதானம் செய்தும், அவளது அழுகையையும் அடக்க முடியவில்லை. அப்பொழுது ஈழவேந்தன் அழுதுகொண்டு இருந்த தங்கையை தூக்கிகொண்டு வந்து. ''செல்வி இங்க பார் நெல்லிமரம்''.., ''நான் நட்டுவச்ச மரம் எப்புடி வளர்ந்துடுச்சி பாரேன்''..., ''செல்வி அழுகையின் ஒலியை சற்று குறைத்தவாறே நெல்லிமரத்தைப் பார்த்தாள்.'' ''இது இன்னும் பெருசா வளந்து நெறையா நெல்லிக்காய் காய்க்கும்''..., ''அப்போ நானு மரத்துல ஏறி, ஒனக்குநெல்லிக்கா பறிச்சி பறிச்சி போடுவானாம்,,, நீ எடுத்து எடுத்து சாப்டுவியாம்'', சரியா என்றான். 

உடனே பட்டென தனது அழுகையை நிறுத்திக்கொண்ட செல்வி, ம்ம்'',,, என்று மகிழ்ச்சியோடு தலையாட்டியவாறே..., நெறையா நெல்லிகா காய்க்குமா.....? 

ம்ம்... ஆமாம் நெறையா காய்க்கும். 

''அண்ணா''... எனக்கு நெறையா வேணும், தருவியா....?'' 

''ம்ம்... எல்லாமே ஒனக்குத்தான்'', நீ இனிமே அழக்கூடாது சரியா...?. 

''ம்ம்.... அயமாட்டேன்.'' கண்களை துடைத்தவாறே செல்வி மகிழ்ச்சியில் கூறினாள். 

குண்டு குண்டு தக்காளி 
குதிர மேல சவாரி 
ஏண்டி செல்லம் அழுவுற 
நெல்லிக் காய் பறிக்கலாம் 
ஆளுக்குப் பாதி திங்கலாம்...என்று பாடியவாறே ஈழவேந்தன் கிச்சு கிச்சு மூட்ட. ''ஹ ஹ ஹா.... ஹ ஹ ஹா... வென  செல்வி மகிச்சியில் சிரிக்க.'' இருவரும் நெல்லிமரத்தின் கீழ் விளையாடத் தொடங்கினார்கள். 

இப்பொழுதெல்லாம், அந்த நெல்லி மரத்தின்மேல் செல்விக்கும் ஒரு தனிப்பாசம் வந்துவிட்டது, அவளும் அந்த நெல்லிமரத்திற்கு தினமும் தண்ணீர் ஊற்றினாள். அதன் அருகில் இருந்து விளையாடுவதையே பெரிதும் விரும்பினாள். அதன் பிறகு அவள் எப்பொழுது அழுதாலும் அந்த நெல்லிமரத்தை காட்டியே அவளை சமாதானம் செய்தான் ஈழவேந்தன்.நெல்லிமரத்தைப் பற்றி பேசினாலே, மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாய் அவளும் அழுகையை நிறுத்திவிடுவது வழக்கமாகிவிட்டது. 

மீண்டும் காலுடைந்த அவனது மனப்புரவி படுக்கையறைக்கு வந்தது. ''அய்யய்யோ..!'' செல்விக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ...?'' ஏன் இப்படியெல்லாம் நடக்குது...?. வீடு மாற்ற வேண்டாமென்று சொன்னால், நமது பேச்சு அப்பா அம்மாவிடம் எடுபடுமா...?. தலைகால் புரியாமல் குழம்பித் தவித்த அந்த குழந்தை மனம் எப்படியோ உறங்கிப் போய்விட்டது. 

விடிய காலையில் தூங்கி எழுந்து வெளியே வந்தான் ஈழவேந்தன். முத்துக்கருப்பனும், தனக்கொடியும் மீன்பாடி வண்டியில் சாமான் சட்டிபுட்டிகளை ஏற்றிக்கொண்டு இருந்தனர். அதை கண்ட ஈழவேந்தனுக்கு திகீர்ரென்று தீப்பற்றியது நெஞ்சத்தில். அந்த தீ நாக்குகளில் அவன் சாம்பலாகிக் கொண்டு இருந்தான. 

ராத்திரி அம்மாவும் அப்பாவும் பேசியது அவனுக்கு உடனே நினைவிற்கு வந்தது. வீட்டை மாற்றவேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். ஆனால், இத்தனை விரைவாக அதை செயல்படுத்துவார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அப்பா அம்மாவிடம் பேசுவதற்குகூட ஒரு அவகாசம் இல்லாமல் போய்விட்டதே என்று மனம் ஓலமிட்டது. ''அம்மா என்ன பண்றீங்க...?'' ஏன் சாமான் எல்லாத்தையும் வண்டில ஏத்துரிங்க...?'' வீட்டை மாற்றுகிறார்கள் என்பதை அவன் தெளிவாக உணர்ந்த போதும், இப்படி அவன் தனக்கொடியிடம் கேட்டான். 

''பக்கத்துத் தெருவுல வேற வீடு பாத்தாச்சி. நாம எல்லாரும் அங்க போவ போறோம்.'' என்று கூறியவாறே எடுத்து வந்த சாமான்களை மீன்பாடி வண்டியில் வைத்துக்கொண்டு இருந்தாள் தனக்கொடி. 

ஈழவேந்தனின் மனது சுக்குநூறாய் நொறுங்கியது.ஆசை ஆசையாய் வளர்த்த நெல்லிமரம், இனி அவனுக்கு சொந்தமில்லை, அதைவிட்டு நிரந்தரமாகப் பிரியப் போகிறோம், இனி இந்த நெல்லிமரத்தோடு பேச முடியாது, விளையாட முடியாது, ஏன் பார்க்கவே முடியாது, என்று அவன் உணர்ந்த அந்த மரண நொடியில் இமைக்கரையை பொத்துக்கொண்டு கண்ணீர் வெள்ளம் பீறிட்டது. 

ஓடிச்சென்று தனக்கொடியின் முந்தானையைப் பிடித்துக்கொண்டான். ''அம்மா வேண்டாம்மா நாம இங்கவே இருக்கலாம்மா...'' இதுதான் நல்ல வீடு..! இதுதான் எனக்கு புடிச்சி இருக்கு என்றான் அழுதவாறே..., 

நாம போகப்போற வீடு இதவிட பெரியவீடு. வாடகையும் குறைவு. பள்ளிக்கூடம் பக்கமாவும் இருக்கு. அந்த வீட்டை வந்துப் பாரேன் ஒனக்கும் ரொம்ப புடிக்கும், என்று சொல்லிக்கொண்டு இருந்த தனம். வீட்டிற்குள் சாமான்களை எடுத்துக்கொண்டு இருந்த முத்துக்கருப்பன் கூப்பிட, இதோ வந்துட்டேன் என்று கூறியவாறே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள். 

ஈழவேந்தன் தனது பேச்சு எடுபடாது என்பதை புரிந்துகொண்டான். வீட்டைவிட்டு போயே ஆகவேண்டிய கட்டாயச் சூழலில் சிக்கிக்கொண்ட அவன். குமுறும் நெஞ்சோடு நெல்லிமரத்தின் அருகே வந்தான். 

எப்பொழுதும் ஆனந்தத்தோடு அசைந்து அவனை வரவேற்கும் நெல்லிமரம். இன்று அசைவின்றி தலைகுனிந்து மண்ணை முறைத்துக்கொண்டு நின்றிருந்தது. ஒரு நாள்கூட அவனைப்பார்க்காமல் அதுவோ, அதைப் பார்க்காமல் அவனோ இருந்ததில்லை. ஆனால், இனி எப்பொழுதுமே அவர்கள் சந்தித்துக்கொள்ள போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. அப்படியே என்றைக்காவது சந்திக்க நேர்ந்தால் அவன் தூரத்தில் இருந்து கையசைக்கலாம். இதுவும் தலையை அசைத்து நலம் பகிரலாம். ஆனால் நெருங்கித் தழுவி இருவரும் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள முடியாதே என்ன செய்வது,,,? ஒருவேளை நெருங்கி வந்து கட்டித் தழுவி உணர்வுகளை பகிர்ந்துகொண்டாலும்கூட அது நிச்சயிக்கப்பட்டதாகவோ... நிரந்தரமானதாகவோ இருக்கப் போவதில்லையே....! 

இந்த ஒரு வருடத்தில் அவனைவிட அது இரண்டு மடங்கு உயரமாகவே வளர்ந்து இருந்தது. ஈழவேந்தன் அதை அண்ணார்ந்துப் பார்த்தான். ஒவ்வொரு சிறு சிறு இலைகளுமே அவனைப்பார்த்து கதறி அழுவதாகவே அவன் மனசுக்குத் தோன்றியது. ''அழாதா பின்ன...?'' அவனுக்காவது அப்பா அம்மா இருக்கிறார்கள். ஆனால், அதற்கு அப்பா அம்மா எல்லாமே இவன்தானே...!'' எப்பொழுதும் அதனோடு நிறைய பேசுவான் அவன். ''இதைத்தான் பேச வேண்டும் என்றில்லை, அந்த மரத்திடம் எதை வேண்டுமானாலும் உளறுவான்.'' அவன் வெளியில் இதுவரை பேசிடாத பல விடயங்களை அதனிடம் பேசி இருக்கிறான். ''இன்னும்கூட சொன்னால்.... முத்துக்கருப்பனுக்கோ, தனக்கொடிக்கோ, செல்விக்கோ, அல்லது உங்களுக்கோ எனக்கோ அவனைப்பற்றித் தெரியாத பல விடயங்கள் அந்த மரத்திற்கு மட்டும்தான் தெரியும்.'' 

''நான் ஒன்ன விட்டுட்டு போகப்போறேன், நீயும் என்கூட வருவியா...?'' ''ஒன்னால வர முடியுமா...?'' ''என்னாலே ஒன்ன விட்டுட்டு இருக்க முடியாதே...! நீ மட்டும் எப்படி இருப்ப என்ன விட்டுட்டு? '' ''நான் இல்லனா ஒன்ன யாரு கவனிச்சிகிவா...?'' - என்று சிறுபிள்ளைதனமாக அவன் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் அந்த நெல்லிமரத்தின் இதயத்தில் கோடாரியாய் விழுந்துகொண்டு இருந்தது. ''எதுவும் சொல்ல முடியாமல் மௌனமாய் அழுதுகொண்டு இருந்த மரத்தை பிடித்து உலுக்கினான்.'' '' ஏன் ஊமையா இருக்க பேசு எதாச்சும், ''பேசு''... கேட்குறேன் இல்ல, என்றான். பெருங்கடல் வேதனை பீறிடும் மனதோடு. 

என்ன பேசும் அந்த நெல்லிமரம், அதுவும் வேதனைத்தீயில் வெந்துகொண்டுதானே இருக்கிறது. 

இந்த பிரிவு இருக்கிறதே, அது யாரைத்தான் விட்டுவைத்து இருக்கிறது, இவர்களை விட்டுவைப்பதற்கு...?. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பிரிவு என்ற ஒன்று இயல்பாகவே இணைந்து இருப்பதுதானே வாழ்க்கையாக இருக்கிறது. அதை தவிர்த்துவிட்டு எவரால்தான் இங்கே வாழ்ந்துவிட முடியும். நம்மோடு இருப்பது எதுவும் நிரந்தரமில்லை. நாமும் நிரந்தரமில்லை. அப்படியெனில், பிரிவதற்கென்றே நாம் பிறந்திருக்கிறோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. 

அண்ணா... ஏன் அயிவுர...?'' அந்த நேரத்தில் அங்க வந்த செல்வி, விபரீதம் புரியாமல் பரிதாபமாக கேட்டாள். 

பாப்பா... நாம வேற வீட்டுக்கு போவப்போறோம்..., 

அப்போ... நெல்லிமரமும் நம்ம கூடவே வருமா..? 

ம்ம்...ஹூம்...! வராது, நாம மட்டும்தான் போவோம், ''கனத்த பேச்சு திக்கித் திணறி வந்தது.'' 

''அப்புறம்... எனக்கு நெல்லிக்கா எப்புடி பறிச்சித் தருவ...?'' 

அப்பாத்தான் நம்மள வேற வீட்டுக்கு கூப்டுகிட்டு போறாரே, அப்புறம் எப்புடி ஒனக்கு நெல்லிக்கா பறிச்சித் தரமுடியும்....? என்றவன் வா போய் அப்பாகிட்ட அந்தவீடு வேணாம், இங்கயே இருப்பமுன்னு சொல்லுவோம். என்று தனது போராட்டத்தில் தங்கை செல்வியையும் சேர்த்துக்கொண்டு அப்பாவிடம் சென்றான். 

ஈழவேந்தன், தன் அப்பா அம்மாவிற்கு அவனது உணர்வுகள் புரியவில்லை என்றே அவன் நினைத்தான். ஆனால், அவன்மீது அவர்கள் மிகுந்த பாசம் வைத்து இருந்தார்கள். வாடகை வீட்டில் வசிப்பவர்கள், அப்போ அப்போ சூழ்நிலைபேற்ப வீடு மாறி மாறித்தானே வாழ்ந்தாக வேண்டி இருக்கிறது. இந்த எதார்த்தநிலையை உணர்ந்துகொள்கிற அளவிற்கு அவன் இன்னும் பக்குவமடையவில்லை என்பதுதானே உண்மை. 

நான்கு ஐந்து நடைகளாக மீன்பாடி வண்டியில் சாமான்களை ஏற்றி புதிய வீட்டில் இறக்கி வைத்துவிட்டு. கடைசி நடையாக சிறு சிறு சாமான்களை எல்லாம் தேடி எடுத்து வண்டியில் வைத்துக்கொண்டு இருந்த முத்துக்கருப்பனிடம், அப்பா நாம அந்த வீட்டுக்குப் போவ வேண்டாம்பா, இங்கவே இருக்காலாம் என்று அழுதகண்ணோடு கூறினான் ஈழவேந்தன். 

ஏம்பா என்ன ஆச்சி...? என்று கேட்ட அப்பாவிடம், எனக்கு அந்த வீடு புடிக்கல, இந்த வீடுதான் புடிச்சிருக்கு என்றான் அழுத்தமாக. 

''எனக்கும் அந்த வூடு புடிக்கில... இங்கதான் புடிச்சிருக்கு.'' அண்ணன் ஈழவேந்தனைத் தொடர்ந்து செல்வியும் அவன் சொல்வதை அப்படியே பின்பாட்டுப்பாடினாள். 

அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. அந்த வீடு ரொம்ப நல்லா இருக்கும் தெரியுமா....? நீங்க வந்து பாருங்களேன். 

''போ .. எனக்கு வேண்டாம் அந்த வீடு''.- ஈழவேந்தன் கூற... 

''போ எனக்கும் வேணாம்''..., செல்வியும் கூறினாள். 

பிள்ளைகளா... சொல்ற பேச்சுக் கேக்கணும் புரியுதா....! 

''கேட்க்க முடியாது.'' கோபத்தோடு சத்தமாகக் கூறினான் ஈழவேந்தன். ''கேக்க முடியாது''... செல்வியும் தீவிரமாக கூறினாள். 

பிள்ளைகளா... சொல்பேச்சி கேட்கல, அப்புறம் அடி வாங்கப்போரிங்க பாருங்க. என்று சற்று மிரட்டும் தொனியில் கூறிக்கொண்டே. அவர்களின் விளையாட்டு சாமான்களை எல்லாம் முத்துக்கருப்பன் மீன்பாடி வண்டியில் வைத்துக்கொண்டு இருந்தான். 

அந்த நேரம் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த தனக்கொடி, என்னங்க எல்லா சாமானும் எடுத்தாச்சி. நல்லத் தேடிப்பாத்துட்டேன் வீட்ல இனிமே ஒன்னும் இல்ல. அவ்ளோதான் வீட்டை பூட்டிட்டு சாவியை வீட்டுக்கார மொதலாளி கைல குடுத்துட்டு போகலாம் என்றாள். 

''அப்படியா...? சரி சரி  பூட்டிட்டு சீக்கிரம் வா.'' நல்ல நேரம் போறதுக்குள்ள அந்த வீட்ல போய் பால் காய்ச்சிடுவோம், என்று முத்துக்கருப்பன் கூறியவாறே, பிள்ளைகளா நீங்க ரெண்டு பேரும் வண்டில ஏறிக்கங்க புது வீட்டுக்கு போவலாம் என்றான். 

''நான் வண்டில ஏறமாட்டேன் போ... என்று ஈழவேந்தான் பிணக்கோடு உதட்டைப் பிதுக்கி வெம்பினான்.'' அவனோடு சேர்ந்து செல்வியும் மழலை சோகத்தோடு நின்றுகொண்டு இருந்த்தாள்.

இங்க பாருங்க..! ''நீங்க ரெண்டு பேரும் அடம் புடிச்சா அப்புறம் அப்பா அடிப்பேன், என்று கூறியவாறே''..., செல்லகுட்டி இங்கபாரு மீன்பாடி வண்டி, நீ வண்டில உட்காந்துகுவியாம், அப்பா வண்டி ஓட்டுவனாம், நீ சந்தோசமா வருவியாம், என்று செல்வியை தூக்கி வண்டியில் உட்கார வைத்தான் முத்துக்கருப்பன். 

வண்டியில் ஏறிகொண்ட சந்தோசம் வந்துவிட்டதால், செல்வி நெல்லிமரத்தின் நினைவுகளை மறந்து, தனது போராட்டத்தை கைவிட்டாள். 

இனி ஒன்றும் பண்ண முடியாது என்பதை உணர்ந்த ஈழவேந்தன், வேறு வழியில்லாமல் வண்டியில் ஏறி அமர்ந்தான். நெல்லிமரத்தைப் பார்த்து, வழியும் கண்ணீரோடு போயிட்டுவரேன் என்று டாட்டாக் காட்டினான். அவனோடு சேர்ந்து செல்வியும் டாட்டாக் காட்டினாள். வண்டி வாயிலை விட்டு நகர்ந்துகொண்டு இருந்தது. ஈழவேந்தனின் மனது அழுதவாறு சென்றது. 

தனது உணர்வுகளை அப்பா அம்மா பெரிதாக பொருட்படுத்தவே இல்லை என்பதை நினைத்தால் அவனுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. 

பிள்ளைகளின் உணர்வுகளை பெற்றோர்கள் பொருட்படுத்தவில்லை எனில், அவர்களின் வாழ்க்கை சீர்குலைந்துவிட அதுவே காரணமாகிவிடுவதோடு, அவர்களின் வாழ்க்கையே அர்த்தமற்றதாகிவிடும் அபாயம் இருப்பதை, ஒவ்வொரு பெற்றோர்களும் உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். 

ஒரு செடி மரமாவதற்கு முன்பு, காற்றில் அது சாய்ந்துவிடாமலும். வளைவு நெளிவு இன்றி நேராக வளருவதற்க்காகவும், அதன் அருகில் ஒரு கம்பு நட்டு அந்த செடியை அதனோடு பிணைத்து வைப்பார்கள். அதே போல்தான், பிள்ளைகள் என்ற செடி வளர பெற்றோர்கள் துணை கம்பாக இருக்க வேண்டும். இதை அனைத்து பெற்றோர்களும் உணர்ந்துகொண்டால் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்தானே. 

அவனது உணர்வுகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பது ஒருபுறமிருந்தாலும். அன்பான வார்த்தைகளால் அவனை தேற்றக்கூட அப்பொழுது அந்த பெற்றோர்களுக்கு அவகாசமில்லாமல் போனதுதான் வருத்தம். பிள்ளைகள் இப்படித்தான் அழுது அடம் பிடிப்பார்கள் பிறகு சரியாகிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான், அவர்கள் முழுக்க முழுக்க தங்களது கவனத்தை வேலையில் செலுத்தி இருந்தார்களோ என்னவோ....! 

மீன்பாடி வண்டியில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்ற ஈழவேந்தான். புது வீடு என்பதால், அங்கும் இங்கும் சுற்றி பார்த்துகொண்டு இருந்தான். தனக்கொடி அடுப்பு மூட்டி, பால் காய்ச்சுவதற்கு தயாராகிக்கொண்டு இருந்தாள். 

முன்பு இருந்த வீட்டைவிட இது கொஞ்சம் பெரியவீடுதான். இருபக்கமும் வாசற்படி இருந்தது. வீட்டிற்கு பின்னால் சிறிய தோட்டம் இருந்தது. கழிவறையும் அங்கே இருந்தது. முன்னாலும் ஆள் புழங்குகிற அளவிற்கு வாசலும், அதனை ஒட்டி வீதியும் இருந்தது. தனக்கொடி காய்ச்சிகொடுத்த பாலை வேண்டா வெறுப்பாக குடித்து முடித்த ஈழவேந்தனுக்கு, அங்கு இருக்கவே மனது ஒப்பவில்லை. பழைய வீட்டையும். நெல்லிமரத்தையுமே அவனது மனப்புரவி சுற்றி சுற்றி வந்துகொண்டே இருந்தது. 

இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலைக்கு வந்த அவன். அப்பா அம்மா கவனிக்காத சமயத்தில் வீட்டைவிட்டு வெளியேறினான். விறு விறு என்று பக்கத்துத் தெருவில் இருக்கும் பழைய வீட்டைநோக்கி நடந்தான். நடந்தான் என்பதைவிட ஓடினான் என்றே சொல்லலாம். பக்கத்து தெருதானே அதனால் அங்கு செல்வது அவனுக்கு சிரமமின்றியே இருந்தது. 

பழைய வீட்டிற்கு வந்த அவனுக்கு பெரிய அதிர்ச்சியாகிவிட்டது. காரணம், வீட்டின் இரும்பு வாயில் கதவு பெரிய வடச்ங்கிலியால் பிணைத்து பூட்டி இருந்தது. கம்பி வாயில் கதவின் இடுக்குகள் வழியாக, நெல்லிமரத்தை பார்த்தான். அது சோகம் தோய்ந்த முகத்தோடு, பரிதாபமாக இவனைப் பார்த்துகொண்டு இருந்தது. சிறை கம்பிகளுக்கு அப்பால் இருந்த நெல்லிமரத்தை பார்க்க பார்க்க சோகம் அவன் மனதை ரம்பமாக அறுத்துக்கொண்டு இருந்தது. வாயில் கதவு உயரமாக இருந்ததால் ஏறி குதித்து உள்ளே செல்ல முடியாத நிலை வேறு. 

குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதுவரை, தங்களது உண்மையானப் பாசத்தை, தங்களுக்குப் பிடித்தவர்கள் மீதும், தங்களுக்குப் பிடித்த பொருட்கள் மீதும் முழுமையாக செலுத்திவிடுகிறார்கள். ''அவர்களின் உண்மையான பாசத்திற்கு பேதமைகள் என்பதே கிடையாது என்பதுதான், இந்த மானுடத்தின் உச்சக்கட்ட புனிதமாக இருக்குமென்று நினைக்கிறேன்.'' இல்லை என்றால், நஞ்சுள்ள பாம்புகளையும் கொஞ்ச முடியுமா...?'' ''மரப்பாச்சி பொம்மைகளோடு பேச முடியுமா...?'' ''மரம், மட்டை, கல்லு, மண்ணுகளோடு விளையாடி களிக்க முடியுமா...?'' ''நாய், பூனைகளோடு சேர்ந்து ஒரே தட்டில்தான் உண்ண முடியுமா...?'' ''எதார்த்த நிலைபாடுகளை என்றைக்குமே திரையிட்டு மறைக்கத் தெரியாத, உண்மையின் உண்மைகள் குழந்தைகளே என்றால் அதை மறுக்கத்தான் எவராலும் முடிந்துவிடுமா...?'' 

மீளாத சோகத்தோடும், தாளாத வலிகளோடும் நெல்லிமரத்தையே வெறிக்கப் பார்த்துக்கொண்டு இருந்தான் ஈழவேந்தன்.ஒரு சொம்பு தண்ணீரில் ஒரு மடக்கு அவனும், ஒரு மடக்கு அதுவும் மாற்றி மாற்றி குடித்த நினைவுகள் அவனை வாட்டிக்கொண்டு இருந்தது. 

''ஈழவேந்தா..., என்னப்பா இங்க நிக்கிற''..., ''என்ன ஆச்சி...?'' என்ற குரல் கேட்டு பட்டெனெ திரும்பி பார்த்தான். தமிழாசிரியர் அமிர்தகணேசன் அவனை நெருங்கி வந்து தோளில் கை போட்டார். 

சார்..., அங்க பாருங்க நீங்க குடுத்த நெல்லிமரம், என்று ஈழவேந்தன் கையால் காட்டினான். 

அதை பார்த்த தமிழாசிரியர், ''அடடா..., நல்லா அழகா வளர்ந்து இருக்கே...!'' உணமையிலேயே நீ திறமையானவந்தான் என்று அவனைப் பாராட்டியவாறே... ஆமாம் ஏன் நீ இங்க தனியா நிக்கிற...? வாயில் பூட்டிக்கிடக்கு, முகமெல்லாம் வாடியிருக்கு என்னாச்சி...? 

சார் நாங்க வேற வீட்டுக்கு மாறி போய்ட்டோம். என்றான் கண்ணை கசக்கியவாறே... 

அப்படியா...? 

ஆமா சார், அப்பா எங்கள வேற வீட்டுக்கு கூப்டுகிட்ட போய்ட்டார். எனக்கு அந்த வீடு புடிக்கல, இந்த வீடுதான் புடிச்சி இருக்கு. 

அது சரி..., ஏன் அந்த வீடு உனக்கு பிடிக்கல....? 

இந்த நெல்லிமரம் பெருசா வளந்து, காய் காய்ச்சா எங்க பாப்பாவுக்கு பறிச்சி தரேன்னு சொல்லிருக்கேன். அந்த வீட்டுல மரமே இல்ல சார். எங்க அப்பாகிட்ட நீங்க சொல்லுங்க சார், நாங்க திரும்ப இங்கவே வந்துடுறோம், என்று பரிதாபமாகக் கூறினான். 

இப்பொழுது, ''தமிழாசிரியர் அமிர்கணேசனுக்கு'', ஈழவேந்தனின் மனநிலை தெளிவாகப் புரிந்துபோய்விட்டது. அவன் பாசமாக வளர்த்த நெல்லிமரத்தைவிட்டு அவனால் பிரிந்துபோக முடியவில்லை என்பது. 

இவனது மனநிலையை எப்படியும் மாற்றவேண்டும் என்று எண்ணிய தமிழாசிரியர். ஈழவேந்தா,,, என்னோடுவா என்று அவனை அழைத்துச்சென்றார். இயேசுவை பின்தொடரும் ஆட்டுக்குட்டியைப்போல, அவர் முன்னேச்சென்றார் அவன் அவரை பின்தொடர்ந்தான். 

சற்றுதூரம் நடந்ததும், ஊருக்கும் ஒதுக்குப் புறத்தில் இருந்த அவரது வீடு வந்தது. ஈழவேந்தனை வீட்டுத் திண்ணையில் உட்காரச்சொல்லிவிட்டு. அவர் வீட்டிற்கு பின்புறம் இருந்த தோட்டத்திற்குச் சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்த அவரின் கையில் இரண்டு மரக்கன்றுகள் இருப்பதை, ஈழவேந்தன் முறைத்து முறைத்துப் பார்த்தான். 

என்னா அப்படி பார்க்குறே...?'' ஒரு மாமரக்கன்று, ஒரு நெல்லிமரக்கன்று, ரெண்டுமே உனக்குத்தான். என்று கூறியவாறே அந்த மரக்கன்றுகள் இரண்டையும் ஒரு சிறிய சாக்குப்பையில் பத்திரமாக வைத்துக்கொண்டு இருந்தார் தம்ழாசிரியர் அமிர்தகணேசன். 

இப்பொழுது ஈழவேந்தனின் மனதில், பட்டென மகிழ்ச்சி குடிகொண்டது. ''இரண்டு கன்றுமே நமக்கா..?'' இரட்டிப்பு மகிழ்ச்சி அவனுக்கு. இப்பொழுது அவனது மனப்புரவிக்கு சிறகு மிக நீளமாக முளைத்து இருந்தது. அது பூமரக்காடு, புல்வெளிப்பாதை எனக்கடந்து, மலைமுகடுகளை எல்லாம் தாண்டி, அண்டார்டிகா கண்டத்தை வட்டமடித்து, மகிழ்ச்சியில் திளைத்தது. 

''இந்தா இத கொண்டுபோய் புதுவீட்டுல நட்டுவச்சி வளர்க்கணும் சரியா...?'' என்று தமிழாசிரியர் மரக்கன்றுகளை அவன் கையில் கொடுத்தார். ''சரிங்க சார்'', என தலையை வேகமாக ஆட்டியவாறே பட்டென மரக்கன்றுகளை கையில் வாங்கிக்கொண்டான். அதற்கு மேல் அங்கு நிற்பதற்கு அவன் நினைத்தாலும். அவன் கால் நிற்க தயாராக இல்லை. நான் வரேன் சார். என்று ஒரு வார்த்தையை உதிர்த்துவிட்டு. ''அவரின் பதிலுக்குகூட காத்திடாமல். மரக்கன்றுகளை தூக்கிக்கொண்டு வீடுநோக்கி ஓடினான்.'' 

இப்பொழுது அவன் கால்களுக்கு சிறகு முளைத்து இருந்தது. சிறிது நேர பயணத்திலேயே வீட்டை அடைந்தவன். செல்வி.. செல்வி.. என்று தனது தங்கையை அழைத்தான். ஹய்... அண்ணா வந்துட்டான். என்று கூறியவாறே வீட்டிற்குள் இருந்து ஓடிவந்தாள் செல்வி. அவளைத் தொடர்ந்து வந்த தனக்கொடி. எங்கடா சாப்டாமகூட போன?'', என்னா அது கைல..? யார் குடுத்தா..?'' என்றாள், அவன் கையில் இருந்த மரக்கன்றுகளை பார்த்து. 

தமிழ் வாத்தியார் குடுத்தாரு என்று அவன் கூற. சரி சரி... களவெட்டியை எடுத்துக்கிட்டுபோய், வீட்டுக்கு பின்னாடி குழித் தோண்டி நட்டு வைங்க என்றாள் தனக்கொடி. சரிம்மா... என்றவாறே அந்த இடத்தைவிட்டு ஈழவேந்தன் நகர. அவனைத்தொடர்ந்து செல்வியும் சென்றாள். 

வீட்டின் பின்புறமுள்ள தோட்டப்பகுதியில்,  இரண்டு குழிகளை தோண்டி. கன்றினை நட்டு தண்ணீர் ஊற்றினார்கள், எரு உரம் எதுவுமேப் போடவில்லை. அந்த மண்ணிற்கு ம் அது அவசியம் இல்லாமல்தான் இருந்தது. ஏனென்றால், அது நல்ல சத்துள்ள வண்டல் மண் என்பதால். 

ஈழவேந்தனுக்கு எதையோ சாதித்துவிட்டதைபோல் மனம் குதியாட்டம் போட்டுகொண்டு இருந்தது. ''பக்கத்தில் மழலையாய் நின்றுகொண்டு இருந்த செல்வியை அப்படியே கட்டியணைத்து தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு'', ''செல்வி அந்த மாங்கன்று உனக்கு,'' ''இந்த நெல்லிக்கன்று எனக்கு.'' நீ தினமும் இதுக்கு தண்ணி ஊத்தணும் அப்போதான் மரம் சீக்கிரம் பெருசா வளரும் சரியா..? என்றான் அவள் கன்னத்தில் முத்தம் தந்தவாறே...! 

செல்வி சந்தோசமாக சரியென்று தலையாட்டிகொண்டே, மரம் பெருசா வளந்து நெறையா மாங்கா காய்க்குமா,,,?'' 

''ம்ம்.. ஆமாம் நெறையா காய்க்கும்.'' 

அப்போ... நாம ரெண்டுபேரும் பறிச்சி பறிச்சி திங்கலாமா...?'' 

ம்ம்.. ஆமாம், உனக்கு நெறைய பறிச்சி தரேன், நீ சாப்டு என்ன....?'' 

''ம்ம்''... ''அப்புறம் நாம வேற வூட்டுக்கு மாறி போய்ட்டா....??????''.---- ''என்று  தனது அடுத்த கேள்வியை செல்வி கேட்க.'' ஈழவேந்தன் பதில் சொல்ல முடியாமல் மௌனமானான். 

அந்த மௌனத்திற்குப்பின் அவன் மனதில் ஒரு தானேப் புயல் தானே உருவாகி, அவன் மனதில் இருந்த கொஞ்சநஞ்ச அறியாமையையும் துடைத்தெறிந்தது.'' மரத்தின் காய், கனி, இலைகள், கிளைகள், வேர்கள், அனைத்துமே மனிதனுக்கு அடிப்படைத் தேவையாக இருக்கின்றன. ஒரு ஏக்கர் நிலபரப்பில் உள்ளமரம், ஒரு ஆண்டிற்கு பதினெட்டு பேருக்கு உயிர்மூச்சு தருகிறது. மனிதனின் தவிர்க்கமுடியாத அத்தியாவசியமான உணவு தண்ணீர்தான், அந்த தண்ணீர் இருந்தால்தான் அனைத்து உயிரினங்களும் வாழ முடியும். மரம் இருந்தால்தான் தண்ணீரும்  காற்றும்  கிடைக்கும். உலக வெப்பம் குறையும். இப்படி எல்லாம் அன்று பள்ளியில் ஆசிரியர் அமிர்தகணேசன் கூறியது, அவன் மனத்திரையில் மீண்டும் மீண்டும் பிரதிபளித்தது பிரளயம் செய்தது.

அப்பொழுது அவன் ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்தான். இனி தனக்கென்று சில மரக்கன்றுகளை எப்பொழுதும் வைத்திருங்கள் என்று தமிழாசிரியர் அமிர்தகணேசனிடம்   சொல்லி வைத்துவிட வேண்டும் என்பதே அந்த முடிவு. 

''ஆம்...!'' இனி எத்தனை வீடுகள் மாறினாலும், அங்கங்கும் அவனது தடயங்களாக சில மரங்களை நமக்காக விட்டுவிட்டுச் செல்வான் என்பதுமட்டும் மறுக்கமுடியாத உண்மைதானே.

 பிள்ளைகளா... இன்னும் என்ன பண்றீங்க, வாங்க, வந்து சாப்டுங்க என்று தனக்கொடி அழைக்க, ஈழவேந்தனும் செல்வியும் வீட்டிற்குள் செல்கிறார்கள்.

''கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .............படீர்ர்ர்ர்.....!!!'' 
''பின்வாசல் கதவு மூடப்படுகிற அதே வேகத்தில்  ஈழவேந்தனின் மனக்கதவோ இன்னும் அகலமாக திறந்துகொள்கிறது.


------------------நிலாசூரியன்.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

புழுதிகாட்டு பொழப்பு (சிறுகதை)...


அது ஒரு நிறைந்த ஆடிப்பருவம். கிராமத்தில் இருந்தவர்களெல்லாம் காடுகளில் பரபரப்பாக காணப்பட்டார்கள். முற்றும் முழுதாக விவசாயத்தையே தங்கள் பிரதான வாழ்வாதாரமாக கொண்ட அந்த கிராமத்து மக்களுக்கு, ஆடிமழை  சரியான தருணத்தில் பெய்துவிட்டால் அவர்களுக்கு மகிழ்ச்சி மனதில் குடிகொண்டுவிடும். மூன்று ஆண்டுகளாக  பருவமழை பொய்த்துப் போனதால், நலிவடைந்து கிடந்த அந்த  கிராமத்து மக்களுக்கு, இந்த ஆண்டு பருவமழை  தேவையான நேரத்தில் சரியான  பெய்துவிட்டதால், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்பட்டார்கள். ''இந்த ஆண்டு தங்களின் வறுமை கொஞ்சமாவது தீரும் என்ற நம்பிக்கை, அவர்களின் மனதில் முட்டி மூண்டு முளைத்திருந்தது.'' இந்த மகிழ்ச்சி அவர்களுக்கு நிலைக்க வேண்டுமெனில், அது அந்த வானத்தின் கைகளில்தான் இருக்கிறது. ஆம்...! அவர்கள் எப்பொழுதும் வானத்தை நம்பி மட்டுமே தங்களது முழு வாழ்க்கையையும், கட்டமைத்து வைத்து இருக்கிறார்கள், அதனால்தான் என்னவோ .., அந்த வானத்தைபோலவே அவர்களின் வாழ்க்கையும்கூட இன்னும் எட்டாத தூரத்திலேயே இருக்கிறதோ என்றுகூட எண்ணத்தோன்றுகிறது.

அவரவர்களும் தங்கள் நிலத்தில் விதை விதைக்கும் வேளையில் முனைப்புடன் இருந்தார்கள். அய்யாசாமி தனது ஒரு ஏக்கர் நிலத்தில், விதை புட்டியில் இருந்து வரகை அள்ளி வேக வேகமாக விதைத்துக்கொண்டு இருந்தார். விதைத்து முடித்ததும் மாடுகளை நுகத்தடியில் பிணைத்து நிலத்தை உழத்தொடங்கினார், அவரது மனதில் ஒரு வேகம் இருந்தது. 

ஒரு ஏக்கர் நிலத்தை இரண்டு ஏர் உழுதால் மூன்று மணி அல்லது நான்கு மணிக்கு உழுது முடித்துவிடலாம். ஆனால், அய்யாசாமியிடம் அவரது ஒரு ஏர் மட்டுமே இருந்தது, ஆகையால் அவரால் வேகமாக செயல்பட்டால்தான், அதுவும் இரவுவரை உழுதால்தான் அந்த ஒரு ஏக்கரை உழுது முடிக்க முடியும், அதோடில்லை..., மற்ற விதைகளை விதைத்தால் ஒரு சால் உழவு உழுதாலே போதும், ஆனால் வரகு, கம்பு, திணை போன்ற உருவில் சிறிய விதைகளை விதைக்கும்பொழுது இரண்டு சால் உழவு உழவேண்டி இருக்கிறது. அதாவது மறுசால் உழவும் உழவேண்டும். இன்னும் விளக்கமாக கூறினால் முதலில் உழுது பிறகு அந்த உழவை புரட்டி உழுவதாகும், இது எதற்கு என்றால் சிறிய விதைகள் ஒரு சால் உழுதவுடன் பூமியின் ஆழத்திற்குச் சென்றுவிடும், அதனால் அதிகமான ஆழத்தில் கிடக்கும் அந்தவிதை மண்பாரம் தாங்காமல்,  மண்ணிற்கு உள்ளேயே மரித்துப்போய்விடுவதோடு, அந்த விதையால் முட்டி முளைத்து மூண்டெழுந்து வெளியே தலைகாட்ட இயலாமல் போய்விடும். எனவே மருசால் உழவாக புரட்டி உழுதால், விதை மண்ணின் மேல்பரப்பிற்கு சிறிது ஆழத்திற்குள் நிலைகொண்டு, எளிதாக முளைத்து எழுந்து வளர்ந்துவிடும். இதனால்தான்  மறுசால் உழவின் அவசியத்தை உழவர்களின் இலக்கணம் தெளிவாக நமக்கு உரைக்கிறது.


அய்யாசாமி உற்சாகமாகவும் வேகமாகவும் உழுதுகொண்டு இருந்தார். 


ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து 
ஓரேர் உழவன் போல...! 

----------குறுந்தொகை. 

ஒரே ஒரு ஏர் வைத்திருக்கும் உழவன், மண்ணின் ஈரம் புலர்ந்து போவதற்குள் தனது நிலத்தை எவ்வளவு துடிப்புடன் வேகமாக உழுவானோ... அதைப்போல அய்யாசாமி மேலே கூறப்பட்டுள்ள குறுந்தொகை பாடலுக்கு ஏற்றார்போல செயல்பட்டுக்கொண்டு இருந்தார், 

இன்று எப்படியும் ஒருசால் உழுதுவிட்டால் நாளை மருசால் உழுதுவிடலாம் என்பது அவரின் கணிப்பாகும். 

அய்யாசாமி இன்று முழுதும் மாட்டிற்கு பின்னே நடந்தாலும் அசந்து போகமாட்டார், அவரது மனது அவரை சோர்வடையவிடாது, ஆனால் எருதுகள் இரண்டும் அசராமல் இருக்க வேண்டும் அல்லவா? அதனால கலப்பையின் மேழியை மிகுந்த அழுத்தம் தராமல் கொஞ்சம் சாதாரணமாகவே பிடித்துக்கொண்டார். 

மாடுகள் அவர் எதிர்பார்த்ததைபோல் நடந்துகொண்டு இருந்தன. காரிக்காளைக்கு நான்கு பல்லு கடை முளைப்பு, ஆனால் செவளைகாளைக்கு சரியாக ஆறுபல்லு, காரி எதற்கும் அஞ்சாது, எத்தனை பாரம் என்றாலும் முண்டி இழுத்துவிடும். செவள கொஞ்சம் நிதானமாகவேதான் செயல்படும் ஆனாலும் அதுவும் வேலையில் சளைத்ததல்ல.

எதிலும் கொஞ்சம் மூர்க்கத்தனமாக செயல்பட துடிக்கும் காரியின் செயல்பாட்டிற்கு முதலில் இணங்கிச் செல்ல முரண்டு பிடித்தாலும் பிறகு அதன் இழுப்பிற்கு இணங்கிச் சென்றுவிடுவது செவளையின் வழக்கம். 

அய்யாசாமி மிக வேகமாக மாடுகளை தட்டி ஓட்டி நிலத்தை உழுதுகொண்டு இருந்தார், ஏழ்மையான விவசாயக்குடும்பத்தில் பிறந்த அவருக்கு இருக்கிற சொத்து, இந்த ஒருஏக்கர் வானம் பார்த்த பூமியும், ஒரு சிறு குடிசைவீடும், எருதுகளும்தான் வேறொன்றுமில்லை. மனைவியும் வயதிற்கு வந்த ஒரு மகளும் அவருக்கு இருந்தார்கள். தினம் தினம் உழைத்துத்தான் தன் குடும்பத்தை நடத்தி வந்தார். இந்த ஒரு ஏக்கர் நிலம் நன்றாக விளைந்தால் அவரின் குடும்ப பசி ஓரளவுக்கு தீரும் என்பதுதான் உண்மை. 

பக்கத்து நிலத்து மருதை மகன் மாரிமுத்து விதை புட்டியில் இருந்து விதையை அள்ளி வேக வேகமாக வித்தைத்துக்கொண்டு இருந்தான், 

அதை கண்ட அய்யாசாமி, யப்பா... மாரிமுத்து...! என்னப்பா வெதைக்கிற...? என்றார். 

சோளம் வெதைக்கிறேன் பெரியப்பா...! என்றான் மாரிமுத்து. 

 அப்படியா....? ''அதுசரி.'' அப்பா வருலியா...? 

இல்ல பெரியப்பா..., ராத்திரியெல்லாம் அப்பாவுக்கு ரொம்ப உடம்பு முடியல, ஒரே இருமலும் காச்சலுமா இருந்துச்சி, அதான் வரவேண்டாம் வூட்ல இருன்னு சொல்லிபுட்டேன். 

''அட பாவமே...,''  வெதப்பு நாளும் அதுமா, இப்பவா ஒடம்பு முடியாம போகணும்; ''சரிப்பா,'' பாத்து பதனமா செய், தெற்கு வடக்குல ஒழவு ஓட்டு, அப்போதான் மழ கிழ பேஞ்சா மேலகாட்டுல இருந்து வர வெள்ளத்த முடிஞ்சவரைக்கும் மண்னரிப்பு வராம ஒழவு சாலு தடுக்கும் பாரு... 

ம்ம், சரி பெரியப்பா..........என்று தலையாட்டியவாறே மாரிமுத்து வடக்கயிறை ஏர் கால்தடியில் பிணைத்து கொண்டு இருந்தான். 

 பண்ணைய கொஞ்சம் இழுத்து வச்சி கட்டிக்கோ, விட்டு கட்டுனா மாடு அசந்துபோயிடும். என்று கூறியவாறே, மீண்டும் மாட்டை தட்டி நகர்த்திக்கொண்டு இருந்தார் அய்யாசாமி. மண் குமிழ் குமிழாக இருபுறமும் அழகாக வெளியேறிக்கொண்டு இருக்க அப்போ அப்போ மேழியை கொஞ்சம் மேலே தூக்கி குழவில் உள்ள மண்ணை தன் கையிலுள்ள தார்குச்சியால் நீக்கும்போதே அது ஒரு தனிய அழகாகவே தெரிந்தது. 

இப்படியே அய்யாசாமி தனது வேலையை வேகமாக செய்துகொண்டு இருந்தார், ஒரு விலா தேய்வதற்கும், அடுத்த விலாவை மிக நேர்த்தியாக கோலி தனது உழவு வேலையை அதன் இலக்கணத்தோடு சரியாக செய்துகொண்டு இருந்தார். சூரியன் உச்சந்தலைக்கு மேலே நேராக நின்று பூமியை தன் சுடு விழிகாளால் முறைத்துக்கொண்டு இருந்தான். 

சும்மாடு கோலிய தலையில் ஒரு தட்டுகூடையை சுமந்து வந்த முருவாயி, வேப்பமரத்து நிழலில் யார் உதவியுமின்றி தானே தலையிலிருந்த கூடையை இறக்கி வைத்ததுமே, 
உச்சிநேரமே தாண்ட போகுது வெசையா வந்து கஞ்சி குடிச்சிட்டு போய்யா என்று அய்யாசாமியை அழைத்தாள். 

உச்சி வெயில் நேரம்தான், அய்யாசாமிக்கும் நல்லப் பசி, எருதுகளும் சோர்ந்து போயிருந்தன, உடனே ஏரை நிறுத்தி, நுகத்தடியில் பிணைத்திருந்த மாட்டின் பூட்டாங்கயிறை தறித்துவிட்டு, மாட்டை ஓட்டிக்கொண்டு சென்றார். 

ஏன்ய்யா, வந்து கஞ்சிகுடிக்காம மாட்டை எங்க ஓட்டிகிட்டுப் போற,,, என்று முருவாயி கேட்க. 

பொறு வாரேன், காட்டுவாறியில மாட்டுக்கு தண்ணிகாட்டி ஓட்டிகிட்டு வாரேன், மாடு அசந்துபோகாம இருந்தாதான் நம்ம பொழப்பு நடக்கும், என்றவாரே மாட்டை ஓட்டிச்சென்றார். 

அந்த எருதுகளின் மீது அவர் மிகுந்த பாசம் வைத்திருந்தார், தான் உணவு உட்கொள்ளும் முன்பு எருதுகளுக்கு தண்ணீர் காட்டி, தீனி கொடுத்துவிட்டுதான் எப்பொழுதும் உணவருந்துவார். ஏன்தான் இந்த மாட்டுமேல இத்தன பாசமா இருக்கியோ என்று எத்தனையோ வட்டம் முருவாயி கூறி இருக்கிறாள். 

மாடுன்னு சாதாரணமா பாக்காத புள்ள, நம்மள மாதிரி அதுவும் ஒரு உசிருதானே, நம்மளவிட நமக்காக அதிகமா வேலை செய்யுறதே அந்த மாடுங்கதான், அதுக்குமட்டும் பசிக்காதா என்ன?, அந்த மாடுங்க நல்லா இருந்தாதான் நமக்கு சோறு, அத மொதல்ல தெரிஞ்சிக்கோ. அதோட பசியத்தான் நாம மொதல்ல தீக்கணும், அப்போதான் நாம சாப்ட முடியும், - முருவாயியின் கேள்விக்கு அவர் எப்பொழுதும் கூறும் பதில் என்று பார்த்தால் இதுதான், - 

தண்ணி காட்டி வரப்பில் உள்ள காவட்டம் புல்லில் எருதுகளை மேயவிட்டுவிட்டு, வேப்ப மரத்தடிக்கு வந்து தனது மனைவி முருவாயி கொடுத்த பழைய கஞ்சியை பச்ச மிளகாய் கடித்துக்கொண்டு, வேக வேகமாக குடித்து முடித்தார். 

மாடு சிறிது நேரம் மேய வேண்டும் என்பதற்காக அய்யாசாமி சிறிது நேரம் வேப்பமர நிழலில் ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் மாடுகளை கலப்பையின் நுகத்தடியில் பிணைத்து நிலத்தை உழத் தொடங்கினார். 

உழாமல் கிடந்த பக்கத்து நிலத்தில் முளைத்து கிடந்த, தொசி கீரையையும், பண்ணக் கீரையையும், பசலைக்கீரையையும், ராத்திருக்கு சமைக்க ஆகுமே என்று பறித்துகொண்டு இருந்த முருவாயி...! ஏன்யா இன்னும் செத்த நேரம் ஓய்வெடுத்துக்க கூடாதா, அதுக்குள்ளே கையும் காலும் பச பசன்னு அலையுதாக்கும், என்று தன் கணவர் அய்யாசாமியை பார்த்து கூற...

ஆமாம்... ஆமாம்...! ஓய்வு எடுக்குறாங்க ஓய்வு...! அதுதான் இப்போ ரொம்ப முக்கியம் பாரு, இன்னைக்கு மொத சாலு ஓட்டி முடிச்சாதான் நாளைக்கு மறு சாலு ஓட்ட முடியும், திடீர் திப்புன்னு மழை பூந்து அடிச்சிடுச்சினா என்னடா சாமி பண்றதுன்னு நானே நெகா புரியாம இருக்கேன், இதுல ஓய்வு எடுக்கணுமாம்... ஓய்வு...! பேசாம வேலைய பார்ப்பியா.... என்று முணுமுணுத்து கூறியவாறே மாட்டை தட்டி நகர்த்திக்கொண்டு இருந்தார் அய்யாசாமி. 

அய்யாசாமி உழவுத்தொழிலை தன் உயிராக கருதுபவர், அதுமட்டுமில்லை அவருக்கு தெரிந்த ஒரே தொழில் விவசாயம்தான், நிலத்தை பார்த்து கடவுளாக பாவித்து கையெடுத்து கும்பிட்டு வணங்ககூடியவர். இந்த உலகிற்கே சோறு போடுகிறவன் விவசாயிதான், விவசாயம் இல்லை என்றால் இந்த உலகமில்லை, விவசாயி இல்லையென்றால் இந்த உலகத்தில் உயிர்கள் இல்லை என்று வியாக்கியானம் பேசுவது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. தனது நிலத்தின் வேலையை செய்ய அவருக்கு எப்பொழுதும் அசதி வந்ததில்லை. நிலத்து வேலை என்றால் மிகவும் சுறுசுறுப்பு ஆகிவிடுவார். வேலையை திருத்தமாகவும் மிக திறமையாகவும், இயற்க்கைக்கு ஏற்றாற்போல் திட்டமிட்டும் செய்வதில் அவருக்கு நிகர் அவர்தான்.  அவரது ஆலோசனைக்கு ஏற்ப ஊரில் நிறையப்பேர் விதைப்பது வழக்கம். விவசாயத்தைப் பற்றி யார் குறை சொன்னாலும் அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. அப்படி குறைசொன்னால் யாரா இருந்தாலும், பொங்கியெழுந்து பொருந்துதள்ளிவிடுவார் இந்த மனுசன்னா பார்த்துகங்களேன். 

இரவு நேரம் எட்டு மணி, 

அய்யாசாமி காயிற்று கட்டிலில் மல்லாக்க படுத்து விழித்துக்கொண்டு இருந்தார், கட்டிலுக்கு பக்கத்தில் தரையில் ஓரம் கிழிந்த ஈச்சம்பாயில் முருவாயியும் மகளும் படுத்து இருந்தார்கள். 

வானம் இருண்டு கிடந்தது. வெண்ணிலவையும் விண்மீன்களையும் காணவில்லை. பளிச் பளிசென்ற மின்னல் அப்போ அப்போ வந்து கண்ணை துளைத்துக்கொண்டு இருந்தது. தூரத்து மேற்குவான் உச்சியில் இடி உர்.. உர்.. என்று உருமிக்கொண்டும், கட கடவென எங்கேயோ தூரத்தில் நகர்ந்துகொண்டும் இருந்தது. அய்யாசாமிக்கு வயிற்றில் புளிகரைத்தது. 

ஐயோ மழை வரபோகிறதே, நிலத்தில் போட்ட விதைகளெல்லாம் வெள்ளத்தில் போய்விட்டால்  என்ன பண்ணுவேன் என்று அவரது அடிமனது அழுது புலம்பிக்கொண்டு இருந்த அதே நேரம், வானம் திடீரென கத்தி கதறி அழுதது. 

அத்திகட்டி ஆலங்கட்டி மழை, கொட்டு கொட்டென்று  கொட்டியது. ''முன்பு தூரத்தில் உறுமிக்கொண்டு இருந்த இடி இப்பொழுது பக்கத்தில் வந்து பயங்கரமாக வெடித்து காதை கிழித்தது, மனதை உடைத்தது.''  பளிச் பளிச்சென வந்த மின்னல் அதிகபச்ச மின்சாரத்தை கண்களில் பீய்ச்சி அடித்தது. படுத்துகிடந்த அய்யாசாமி எழுந்து அமர்ந்துகொண்டார். 

இடிக்கிற ஒவ்வொரு இடிக்கும் இடிந்துகொண்டு இருந்தது அவரது இதயம். சிறிது நேரத்தில் கூரையின் ஓட்டை வழியாக மழை ஒழுகத்தொடங்கியது, முருவாயியும் அவளது மகளும் எழுந்துகொண்டார்கள், இருக்கிற பாத்திரங்களை எடுத்து ஒழுகிற இடங்களில் வைத்தார்கள், மழை மேலும் வலுத்தது. இருபத்தொரு மழையும் எண்ணியடித்தது, கூரையின் ஓட்டை வழியாக் ஒழுகும் நீர் பாத்திரத்தை நிறைக்க நிறைக்க முருவாயியும் அவளது மகளும் அதை எடுத்து வெளியே ஊற்றிவிட்டு மீண்டும் மீண்டும் ஒழுகும் இடங்களில் வைத்துக்கொண்டு இருந்தார்கள். 

ஐயோ.... எல்லாம் போச்சே.....! என்ன பண்றதுன்னு தெரியலையே, இந்த வருசமாச்சும் வெளையுமுன்னு நெனச்சேன், அதுலவும் மண்ணு விழுந்துடுச்சே..., என்று  குரலை உதிர்த்துவிட்டு மேற்கொண்டு பேச முடியாமல் தலையில் கைவைத்துக்கொண்டார் அய்யாசாமி. 

ஏன்யா... இன்னும் இழக்க நம்மகிட்ட என்னதான் இருக்கு? வச்சி இருக்க ஒரு பொம்பளப்புள்ளைய எப்படி கரசேக்க போறோம், அதுக்குன்னு என்னத்த வச்சி இருக்கோம். இந்த மானத்த நம்பி இந்த மண்ண நம்பி எப்படி வாழப்போறோம்?, வேண்டான்ய்யா, எங்கயாச்சும் போய்டுவோம். பட்டணம் போயி எதாச்சும் வேல செஞ்சி பொழச்சிக்குவோம், இந்த வெவசாயமெல்லாம் நமக்கு வேண்டான்ய்யா என்றாள் முருவாயி. 

இத பாரு புள்ள வெவசாயத்தபத்தி கொற சொல்லாத. ''இந்த மானம் பேயவேண்டிய நேரத்துல காயுது, காய வேண்டிய நேரத்துல பேயுது அதான் இப்படி எல்லாம் ஆகுது; இதுக்கு என்ன பண்ண சொல்ற...?.''  ''வெவசாயத்தையே உட்டுடுன்னு சொன்னா எப்புடி?.''  ''இந்த ஒலகத்துல அவன் அவனும் வெவசாயத்த உட்டுபுட்டா அப்புறம் எப்புடி சாப்புடுவானுவு..?''  ''அரிசி என்னா மானத்த பொத்துக்கிட்டு கொட்டுமா?''  ''இல்ல அரிசியையும், பருப்பையும், இரும்பு தங்கம் தயாரிக்கிரமாதிரி விஞ்ஞான மொறையில தயாரிச்சி  சாப்புடுவானுவுளா...?'' ''இல்ல பணம் காசத்தான் திம்பானுவுளா...?''  ''வெவசாயம் செய்யலனா இந்த ஒலகத்துல ஒருத்தனும் உசிரு வாழமுடியாது தெரிஞ்சிக்கோ''. வெவசாயத்த தவர எனக்கு வேற என்னடி வேலத்தெரியும்? என்னய பட்டணத்துல போயி  பிச்ச எடுக்க சொல்றியா?. பிச்சை எடுத்தாக்கூட, கைக்காலு நல்லாத்தானே இருக்குனு நெனச்சி ஒருத்தனும் ஒருவா போடமாட்டான், என்று புலம்பினார் அய்யாசாமி. 

இந்த வருசம் வெளையும் அடுத்த வருசம் வெளையுமின்னு, நாமளும் வருச வருசமா காத்துகெடக்குறோம், ''வூட்ல இருந்த பித்தள சாமான் மொத கொண்டு அத்தனையும் அடகு வச்சி முழுகிபோச்சி.''  இதுக்குமேல என்ன பண்ண போறோம். பொட்டபுள்ள ஒன்னு பெத்து வச்சி இருக்கமே அத எப்புடி வாழ வக்க போறோம்?. ''வெவசாயத்த தவர வேற வேல தெரியாதுனா நாம எப்படித்தான் கொற காலத்த கழிக்கிறதாம்?.''  ஊரெல்லாம் கடன் வாங்கி வயித்து குழில போட்டாச்சி. இனி ஒருத்தர்கிட்டவும் கையேந்த முடியாது. இப்ப சாவுரத தவர வேற என்ன வழியிருக்கு என்று புலம்பிய முருவாயி, எம்பொழப்பு இப்படியாகி போச்சே என்று அழுதாள். 

நீ மொதல்ல பொலம்புறத நிறுத்த போறியா இல்லையா?, மேல மேல பேசின அப்புறம் என்ன பண்ணுவன்னு தெரியாது என்று கோபத்தோடு அய்யாசாமி கூற...உடனே முருவாயி தன் வாயை மூடிக்கொண்டாள். 

அவர்கள் பேசியதெல்லாம் சலசலவென்று கொட்டுகிற மழையின் சத்தத்தில் கரைந்து போயிருந்தது, தெருவெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, மழை கொஞ்சமும் குறையவே இல்லை, அய்யாசாமி வயிற்றில் எரிந்த தீயும் குறையவில்லை. 

அதிகாலை நேரம், 
கண்ணீர் மல்க தனது நிலத்தை வெறித்துக்கொண்டு இருந்தார் அய்யாசாமி. மேல காட்டில் இருந்து வந்த பெரும்காட்டு வெள்ளம், கிட்டத்தட்ட நான்கு ஐந்து பர்லாங்கிற்கு மேல் உள்ள நிலங்களை நாசம் செய்து, மண்ணை அறுத்து விதைகளை எல்லாம், வாறி வழியாக அடித்துச்சென்றிருந்தது. அய்யாசாமி நிலத்திலும்  மண்ணெல்லாம் போய்விட்டது விதை எங்கே இருக்க போகிறது, பல பேரோட நிலத்திலும் வெள்ளம் தனது கைவரிசையை காட்டி இருந்தது. 

அய்யாசாமிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அழக்கூட அவர் சக்தி இல்லாமல் இருந்தார். இந்த வருடம் எப்படியும் விளையும், அதை வைத்து இருக்கிற கடன்களை எல்லாம் தீர்த்துவிடலாம் என்ற அவரது எண்ணம் இப்படி பாழாகிவிட்டதே. எல்லா விவசாயிகளுமே அழுது புலம்பிக்கொண்டுதான் இருந்தார்கள், சில விவசாயிகள் மீண்டும் விதை வாங்கிவந்து மறுபடியும் விதைப்பதற்கு முனைந்துகொண்டு இருந்தார்கள். 

அய்யாசாமி தளர்ந்த நடையோடு நடந்துகொண்டு இருந்தார். மீண்டும் விதைவாங்க கையில் பணம் இல்லையே என்ன செய்வது, யாரிடம் கேட்பது, இந்த சூழலில் யாரிடம் கேட்டாலும் எதுவும் கிடைக்காதே. அவரது மனம் வேதனையில் விம்மி வெடித்துவிடும்போல் இருந்தது. நுரையீரல் சுவாசப்பை கணத்தது. மூச்சு காற்றின் பயணம் திணறலில் இருந்தது. ஐயோ,,, என்று வாய்விட்டுக் கதற வேண்டும்போல் தோன்றியது அவருக்கு. ஆனாலும் முடியவில்லை. நடையில் ஒரு தள்ளாட்டத்தோடு நடந்துகொண்டு இருந்தார். 

ஏன்யா,,, காலங்காத்தால காட்டுக்கு போயிட்டியாக்கும். அந்த வயித்தெரிச்சல ஏன்யா போய் பாத்த...?. சரி சரி... கை கால அலம்பிகிட்டு வந்து கஞ்சிகுடி என்று முருவாயி சொல்ல. வேண்டாமென்று மறுத்துவிட்டார், அவர் மனம் முழுக்க பாரம், தாங்க முடியாத துயரம், விவசாயத்தை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி தனது வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிற விவசாயின் பிழைப்பு இப்படி ஒரு இக்கட்டான நிலையில் சிக்கிக்கொள்வது மாபெரும் கொடுமை அல்லவா. 

விவசாயத்தை மட்டுமே தனது உயிர் மூச்சாக சுவாசித்துக் கொண்டு, விவசாயத்தை தவிர வேறு வேலை எதுவுமே தெரியாதவர்கள் அய்யாசாமியைப்போல பலர் எப்படி இந்த உலகில் வாழ்வது? கேள்விக்குறி மட்டுமே நமக்கும் பதிலாக இருக்கிறது. 

எப்பொழுதும் இளைஞனைப் போல் சுறு சுறுப்பாக இயங்கிகொண்டு, ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டே இருக்கும் அய்யாசாமி, மனமுடைந்து கட்டிலில் சுருண்டு கிடந்தார், பம்பரமாய் சுழன்றே பழக்கப்பட்ட அவர் ஒரு நாளும் இப்படி முடங்கியதில்லை. அவரது மனம் வேதனையின் உச்சத்தில் வெம்பிக்கொண்டு இருந்தது. 

என்னயா... எழுந்திருய்யா...! அய்யாசாமி இப்படி கட்டிலில் கிடப்பதை கண்ட முருவாயி அவரை குரல்கொடுத்து எழுப்பினாள், 

அவர் எந்த சலனமும் இன்றி அப்படியே படுத்திருந்தார். 

கட்டிலுக்கு அருகில் சென்ற முருவாயி, கட்டிலில் அமர்ந்து அவர் தலையை மெல்ல தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு, கைகளால் அவரை சீண்டி எழுப்பினாள். 

இங்கபாருய்யா... கூப்டுறேன் இல்ல... எழுந்திருய்யா... 

ம்ம்...! என்ற ஒரு வார்த்தை மட்டும் அவரிடமிருந்து பதிலாக வந்தது. 

என்னய்யா இது, ஒரு நாளும் பகல் நேரத்துல படுக்கமாட்டியே.., மொதல்ல எழுந்திருய்யா என்றாள் ஆதரவாய் அவர் தலையை கோதிவிட்டவாரே. 

அவரிடமிருந்து எந்த பதிலுமில்லை, முருவாயி மடியில் தலைவைத்தவாரே மோட்டுவளையை முறைத்துக்கொண்டு இருந்தார். 

''இந்தாய்யா.. இத வச்சி வெத வாங்கிட்டு வா. திரும்ப வெதைக்கிலாம், என்று கூறியவாரே தனது கழுத்திலிருந்த தாலியை கழட்டி அவர் கைகளில் வைத்தாள் முருவாயி.'' இதை சிறிதும் எதிர்பார்க்காத அய்யாசாமி சட்டென கட்டிலில் இருந்து எழுந்து, முருவாயி என்ன இது? மிஞ்சி இருக்குறதே இது ஒன்னுதான், இதையும் எழக்கனுமா...?. தயவு செஞ்சி கழுத்துல போட்டுக்க புள்ள என்றார் பதை பதைக்கும் மனதோடு. 

ஏன்யா இதுக்குபோயி பதறுற...?. எங்க அப்பன் வீட்ல இருந்து நான் கட்டுன சீலையோட வந்தேன், இதுவரைக்கும் என்ன கண் கலங்கவிடாம ராணிமாதிரி பாத்துக்குறியே, ஒன்னவிட இந்த தாலி முக்கியமா?. எனக்கு ஒரு மஞ்ச கயிறு போதும்ய்யா, நீ இப்படி கட்டுலுல சுருண்டு கிடக்குறத என்னால தாங்க முடியலய்யா. இந்த வருசம் நல்ல வெளையுமுன்னு எனக்கும் தோணுது. மண்ண நம்பியே உசுரு வாழுர ஒன்னோட ஒழைப்பு நம்மள காப்பாத்தும், நீ மொதல்ல போ..! போய் இத அடகுவச்சி வெத வாங்கிட்டு வா என்று தாலியை அவர் கையில் திணித்தாள். 

தன் மனைவியை பெருமையோடும், மிகுந்த அன்போடும் பார்த்த அய்யாசாமி. முருவாயி... ஒன்னோட பாசம் எனக்கு தெம்பு குடுத்துடுச்சி புள்ள..., நான் தவிக்கிற நேரத்துல தாய்போல இருந்து, சரியான வழிகாட்ட ஒன்னால மட்டும்தாண்டி முடியும், என்றவாறே மேற்கொண்டு எதுவும் பேசமுடியாமல் நா தழு தழுத்தது, அவரது கண்கள் உடைந்து தாரை தாரையாக நீர் கொட்டியது, 

இதைகண்ட முருவாயி, என்னய்யா இது, எதுக்கும் அஞ்சாத நீ இதுக்குபோய் அழுலாமா....? என்றவாறே தன் முந்தானை எடுத்து அவர் கண்ணீரைத் துடைக்க, அப்படியே தன் மனைவி முருவாயியை இறுக்கி கட்டிக்கொண்டார் அய்யாசாமி. 

இவற்றை எல்லாம் கண்ணீர் மல்க பார்த்துகொண்டு இருந்தாள். அவர்களின் ஒரே மகள் மட்டுவார்க்குழலி. 


********************* முற்றும் ******************** 

---------------நிலாசூரியன்.