வெள்ளி, 26 நவம்பர், 2021

 

                                         =+++தமிழனின் சிந்தனைக்கு+++===

 வானத்தின் கொடையாம் மழை, அந்த மழையின் ஒவ்வொருத்துளியும்  இந்த பூமிக்கு உயிர்த்துளி என்று ஆன்றோர்களும் சான்றோர்களும் கூறுகின்றனர், இன்று ஊரே வெள்ளக்காட்டில் மிதக்கிறது, வருடா வருடம் தண்ணீருக்கு தவிக்கும் சென்னை மாநகரம் இன்று தண்ணீர் மாநகரமாக தத்தளிக்கிறது, இந்த வடகிழக்குப் பருவமழையால் நாம் பெருத்த இன்னலையும் இழப்பையும் சந்தித்தாலும், இந்த ஒரு மாத கால மழைதான், நமக்கு  இன்னும் ஓராண்டுக்கான வாழ்வாதாரம் என்பதை எண்ணி இந்த கடினத்தை நாம் கடந்து ஆகவேண்டிய கட்டாயமும் கடமையும்  இருக்கிறது.

 

கொரோனா பொதுமுடக்த்தை  கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகிலுள்ள அனைத்து நாடுகளும் கடைப்பிடித்தன, இதனால்  நல்ல  காலநிலை மாற்றமும், சுத்தமான காற்றும், வேண்டிய அளவு மழையும், குளிர்ச்சியான பூமியையும் நம்மால் உணர்ந்து அனுபவிக்க முடிந்தது

 

விமானம் மற்றும் வாகன புகைகளின் வெப்பத் தாக்குதல்களால் பதினைந்து ஆண்டுகாலமாக நாளுக்கு நாள் நலிந்து வந்த ஓசோன் அடுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல முன்னேற்றத்தை முழுமையாக அடைந்ததன் காரணமாக  நல்ல மழை நமக்கு கிடைத்து இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி இயற்கையை வளர்ப்பதற்கு பயன்பட வேண்டும் என்பதுதான் நமது முக்கிய நோக்கம், ஏனென்றால்! இயற்கையை அழிக்கும் விஞ்ஞானம் ஒருபோதும் வளர்ச்சியை வழங்காது, நீர், நிலம், காற்று, தீ, வானம், போன்ற இயறகைகள்தான் இந்த ஞாலத்தில் ஒவ்வொரு உயிரும் பிறப்பதற்கும் வாழ்வதற்கும் அடிப்படை காரணிகளாக இருக்கின்றன, இந்த நிலையில்  விஞ்ஞானத்தை பேசுகிறவர்கள், மண், நீர், சூரியவெப்பம், காற்று, போன்ற எந்த ஒரு இயறகையின் துணையும் இல்லாமல் ஒரே ஒரு உணவுப் பொருளை உருவாக்க முடியுமா என்று யோசிக்க வேண்டும்.

  

உலகிற்கே முதல் தேவையும், மூலத்தேவையும் உணவுதான் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. அந்த உணவுப் பொருள்களுக்கெல்லாம் மூலப் பொருளும் மிக மிக முக்கியமான பொருளுமாக இருப்பது தண்ணீர்தான் என்பதை மறக்கவோ மறுக்கவோ இயலாது. ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும் என்ற பேராசையில் பணத்தை தேடி நாயாய் அலைந்துகொண்டு இருக்கிறான். இந்த நிலையில் தண்ணீருக்காகத்தான் மூன்றாம் உலகப்போர் மூளும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுவதையும், நன்நீரின் அளவு மிகவும் குறைந்துவிட்டதையும் பார்த்தல், நாமெல்லாம்  அரிசியைத்தேடி அலையப்போகிற நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை எத்தனைபேர் புரிந்துகொள்வார்கள் என்று தெரியவில்லை. இந்த இரண்டு ஆண்டுகால பருவமழை தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்திற்கு நிரந்தர தீர்வாகிவிடாது, இமய மலையிலிருந்து தமிழகம்வரை நீர்வழிச் சாலைகளை சரியாக உருவாக்கினால்மட்டுமே நாட்டின் தண்ணீர் தேவையை முழுமையாக தீர்க்க முடியும்.

வருகிற அரசியல் தலைவர்கள் நாட்டை உயர்த்துகிறோம் என்று கூறி, இயந்திர தொழிற்ச்சாலைகளையும், அணு உலைகளையும், அந்நிய வேதியல் கம்பனிகளையும் வளர்த்துகொண்டு இருக்கிறார்கள். இரசாயன உரங்களின் ஊடுருவலுக்கு பரந்த மனசோடு பச்சைக்கொடி காட்டி, பொன்விளையும் பூமியினை மலடாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில்  ஏத்தம் கட்டி நீரிறைத்து, யானைகட்டி போரடித்து விவசாயத்தில் தன்னிறைவு கொண்டிருந்த தமிழகம், இன்று கொஞ்சம் கொஞ்சமாக பாலைவனமாகி வந்துகொண்டு இருக்கிறது, விளைநிலங்கள் வீடுகளாகவும், சொகுசு மாளிகைகளாகவும் மாறிவிட்டன, விவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகள் கன்னித்தீவு கதையைப்போல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தூர்ந்து போன ஏரிகளையும், குளங்களையும் தூர்வாரி, நதிகளை சீரமைத்து, வங்ககடலிலும், அரபிகடலிலும் வீணாக போகும் நீரை சேமிக்க அரசு முனைப்பு காட்ட முற்றிலும் தவறிவிட்ட நிலையில் இருக்கிறது. இமயமலை பனிக்குன்றுகளில் இருந்து வந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் குதித்து கொந்தளிப்பு செய்யும் நீர் என்றைக்கு கன்னியாகுமரிக்கும் காவிரி டெல்டாவிறகும் வருகிறதோ அன்றுதான் தமிழகம் வறட்சியில் இருந்து மீளும்.

 

இமயமலையில் உள்ள கங்கோத்ரி, சடோபந்த், பிண்டாரி போன்ற பனிப்பாறைகளில் இருந்து உருவாகும் நீரானது பாகீரதி நதி என்று அழைக்கப்படுகிறது, இது 200 கிலோ மீட்டர் பயணித்து உத்தரகாண்டில் உள்ள தேவபிரயாக் என்ற இடத்திற்கு வருகிறது, அதே போல் இமயமலைத் தொடரில் உள்ள நந்தாதேவி, திரிசூல் போன்ற பனிச் சிகரங்களில் இருந்து உருவெடுக்கும் நீர் வீழ்ச்சியானது அலக்நந்தா என்ற ஆறாக பெயர்பெற்று 190 கிலோ மீட்டருக்கும் மேல் பயணித்து வந்து அதே தேவபிரயாக் என்ற இடத்தில் பாகீரதியோடு கலந்து கங்கையாக உருவெடுக்கிறது, இந்த வற்றாத உயிர்நதியானது வட இந்தியாவில் 2500 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் பயணித்து பல மாநிலங்களை செழிப்படையச் செய்து, வங்கதேசத்தோடு   தனது பயணத்தை முடித்துகொண்டு வங்காள விரிகுடா கடலில்போய் விழுந்துவிடுகிறது, சீனாவையும் பாக்கிஸ்தானையும் வளபடுத்திகொண்டு இருக்கின்ற சிந்து நதியானது  காஷ்மீரைவிட்டு கீழிறங்க வழியின்றி அப்படியே சென்றுகொண்டு இருக்கிறது. சிந்துவை கங்கையில் இணைத்து, கங்கையை காவிரியில் இணைத்தால் தமிழகம் தண்ணீர் தேவையை நிறைவு செய்து செழிப்படையும் என்பதோடு ஒட்டுமொத்த இந்தியாவே செழிப்பையும் என்பதுதான் உண்மை.


வருடா வருடம் வெள்ள எழுச்சியின் காரணமாக வட இந்தியா நாசபட்டு போகிற நிலை தொடர்ந்துகொண்டு இருக்கும் போதிலும், அந்த வெள்ளநீர் கீழிறங்கி தென்திசை வர இயலவில்லை, அது வருவதற்கான வழியுமில்லை, எனவேதான் தென்னிந்தியாவான தமிழகம் அண்டை மாநிலங்களில் தண்ணீர் பிச்சைகேட்டு தவித்துக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் தமிழனின் வீழ்ச்சி இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்ற பொருளையே நமக்கு உணர்த்துகிறது. ஒரு மாநிலத்தின் வீழ்ச்சி ஒரு நாட்டின் வீழ்ச்சி, ஒரு மாநிலம் குடிநீருக்காக தவிப்பது ஒரு நாட்டின் தவிப்பு என்பதை உணராதவரை சனநாயகமும் சமதர்மமும் எப்படி நிலைத்திருக்க முடியும்.

மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கீழிறங்கி வருகிற நீர், இந்தியாவின் கடைசிகோடி நிலபரப்பாக கீழ்மட்டத்தில் உள்ள தமிழகத்திற்கு வந்துசேரவில்லை, அந்த நீர் வீணாக கடலில் கலக்கிறது, இதைப்பற்றி யாருமே கவலைப்படவில்லை. ஆனால் மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் மட்டும் பேசப்படுகின்றன. மழையே பொய்த்து போய்விட்ட நிலையில் என்ன செய்யமுடியும்? விவசாயத்தை தவிர வேறு வேலைகள் செய்யுங்கள் என்று சொல்லுகின்ற அரசியல்வாதிகளின் பேச்சு விவசாயிகளை இரணப்படுத்துகிறது, இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்கிற நிலை மாறி வருவதும், அதை டிஜிட்டல் வளர்ச்சி என்ற பெயரில் மாற்ற முனைவதும் மிகுந்த வேதனை அளிக்கும் விடயமாக உள்ளது.

முன்பொரு காலத்தில் நமது முப்பாட்டன் கடல்கடந்து சென்று பலநாடுகளை ஆண்டுவந்தான். இன்று தமிழனின் பெருமையும், வராலறும் மூடிமறைக்கப்பட்டுவிட்டன, தமிழன் வாழ்வாதாரங்களை இழந்துகொண்டு இருக்கிறான். கரிகால் பெருவளத்தானும், இராசராச சோழனும் உலகையே கதிகலங்க வைத்த வரலாறெல்லாம் விட்டுவிட்டு, நாம் வேறு ஏதோ இட்டுக்கட்டப்பட்ட  புராண வரலாறுகளையோ புரட்டிக்கொண்டு இருக்கிறோம்.

இன்று தண்ணீருக்காக பிட்ச்சைகேட்கும் நமக்கு அன்றைய தென்னிந்தியாவின் அலக்சாண்டர் என்று போற்றப்பட்ட நமது பாட்டன் ராசேந்திர சோழனை நினைத்தால், நமது இயலாமையை எண்ணி உள்ளம் குமுறுகிறது. இந்தியாவை மட்டுமல்ல கடல்கடந்த பலநாடுகளையும் கதிகலங்க வைத்தவன் இராசேந்திர சோழன்.

சீதையை மீட்க வானரங்களின் துணையோடு பல நாட்கள் கடினமாக உழைத்து கடலில் பாலம் கட்டினான் ராமன் என்ற ஆரிய புராணக்கதையை என்றும் மறக்காமல் பேசுகின்ற நீங்கள், பாண்டிய நாட்டின் மணிமுடியை மீட்க கடலில் ஆயிரக்கணக்கான படகுகளையும் கப்பல்களையும் வரிசையாக நிறுத்தி அதையே பாலமாக்கி தனது படைகளோடு இலங்கைக்குச் சென்று மகிந்தனை வென்று பாண்டிய மணிமுடியை மீட்ட நமது பாட்டன் ராசேந்திர சோழனின் வரலாற்றினை யாராவது நினைத்து பார்க்கிறீர்களா?

இன்று தண்ணீருக்காக கேரளத்திடமும், கர்நாடகத்திடமும், டெல்லியிடமும் கையேந்தி கிடக்கிறோம். ஆனால் நமது பாட்டனும் முப்பாட்டனும் அப்படி இருந்தார்களா? இல்லையே... அப்படியானால் நாம் நமது நிலை தாழ்ந்து கிடக்கிறோம் என்ற உண்மை வெளிச்சமாகிறது.

கடாரத்த்தை வென்று வெற்றிக்கொடி நாட்டியதோடு மட்டுமல்ல நமது புகழ், மேலை சளுக்கர்களை வென்று, அதற்கு மேல் இடைப்பட்ட நாடுகளையும் வென்று, சீறியோடிய கங்கையை கடக்க, கங்கையின் இக்கரையில் இருந்து அக்கரைவரைக்கும் யானைகளை வரிசையாக நிறுத்தி, யானைகளையே பாலமாக்கி தனது படைகளோடு கங்கையை கடந்துச் சென்று, வங்கதேசத்தை கைப்பற்றியதோடு அல்லாமல் நூற்றுக்கணக்கான யானைகளின் மீது, பெரிய பெரிய பானைகளில் கங்கைநீரை தமிழகத்திற்கு எடுத்துகொண்டு வந்து கங்கைகொண்ட சோழபுரத்தை நிறுவியவன் நமது பாட்டன் ராசேந்திர சோழன் என்பதை நினைத்தால், இன்று தண்ணீருக்கு பிச்சை கேட்கும் நமது இயலாமை நம்மை கொன்று தின்னாமல் இருந்துவிடுமா? உண்மையானத்தமிழன் நிச்சயம் கூனிக்குறுகித்தான் போவான் என்பதில் சந்தேகமில்லை.

கங்கா நதியும் கடாரமும் கைகொண்டு
கங்கா புரிபுரந்த கற்பகம்
கங்கா நதியும் கடாரமும் கைகொண்டு
சிங்கா தனத்திருந்த செம்பியர் கோன்.

----------
ஒட்டகூத்தர்

களிறு கங்கைநீர் உண்ண, மண்ணையில்
காய்ச்சினத் தோடே கலவு செம்பியன்
குளிறு தெந்திரைக் குரை கடாரமும்
கொண்டு மண்டலம் குடையுள் வைத்தவன்.

-----------
சயங்கொண்டார்

அன்றே கங்கையை நாம் வென்றவர்கள், இன்று கங்கையை காவிரியோடு இணைக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். அதை செய்ய முடியாதென்றால் நமக்கு குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் தேவையான தண்ணீருக்கு அரசு ஏதாவது ஒரு நிரந்திர தீர்வினை தரவேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.


                              ===
நிலாசூரியன் தச்சூர் 

         சமூக ஊடக முற்போக்கு எழுத்தாளர் 

               கடலூர் மாவட்டம் மேற்கு