வெள்ளி, 20 மார்ச், 2015

விழிக்க விழிக்கத்தான் விடியும்




விதைக்க விதைக்கத்தான் முளைக்கும் கவிதை 
முளைக்க முளைக்கத்தான்  நிலைக்கும்  - புலமை 
நிலைக்க நிலைக்கத்தான்  வளரும் தமிழ் 
வளர வளரத்தா  னொளிரும் 

உழுக உழுகத்தான் புரளும் மண் 

புரள புரளத்தான் மலரும் - மலர் 
மலர மலரத்தே  னொழுகும்  மனிதம் 
ஒழுக ஒழுகத்தான் துளிரும்  

திறக்க திறக்கத்தான் தெரியும் கண் 

விழிக்க விழிக்கத்தான் விடியும் - உறக்கம் 
ஒதுக்க ஒதுக்கத்தான் உயரும் வாழ்க்கை 
உயர உயரத்தான் குளிரும்

நடக்க நடக்கத்தான் முடியும் எல்லை 

முடிய முடியத்தான் தொடரும் - வெற்றி 
தொடர தொடரத்தான் புகழும் உனைத்  
தேடி வருவது  நிகழும்  

குடிக்க குடிக்கத்தான் ஏறும் போதை 

ஏற ஏறத்தான் ஊறும்  - புத்தி 
ஊற ஊறத்தான் பாரும்   தமிழ்ப்பால் 
இன்னும் வேண்டியே கோரும்  

கொடுக்க கொடுக்கத்தான் கிடைக்கும் அன்பு 

கிடைக்க கிடைக்கத்தான் துடிக்கும் - மனம் 
துடிக்க துடிக்கத்தான் உடைக்கும் உணர்வு  
உலக வாழ்க்கையை படிக்கும்...!


----------------நிலாசூரியன்.