வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

                         
                      திராவிடம் என்ற சொல் நமக்கு எதிரானது  அல்ல..!
                        ==============================================

திராவிடம் என்றால் அது ஒரு கேடுகெட்ட வார்த்தையாகவும், அதற்கும் தமிழர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத சொல்லாக இங்கே சில பேரறிவாளிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 


திராவிடம் என்பது மதமோ, சாதியோ, அல்லது அது நமக்கு அப்பாற்பட்ட வார்த்தையோ அல்ல, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு இன்நான்கு நிலத்தையும், நிலத்தவரையும், அதாவது தென் இந்தியர்களையும் தென் இந்தியாவையும் ஒற்றை சொல்லில் குறிப்பிடுவதுதான் திராவிடம் திராவிடர் என்பது, இதை புரிந்துகொள்ள இயலாதவர்களும், இந்து பாசிச பாசறையில் பாடம் கற்றுக்கொண்டு இருப்பவர்களும் திராவிடத்தின்மீது தவறான கருத்துக்களையே திணித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

திராவிடம் பேசும் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம், அதற்க்காக திராவிடம் பேசுவதோ, திராவிடம் என்ற சொல்லை உச்சரிப்பதோ அசிங்கம் என்று கருதுவது அறிவிலித்தனத்தின் உச்சம் என்றே அடித்து கூறுவேன்.

ஒரு இனக்குழுவாக உருவாகி பல இனக்குழுக்களாக பிரிந்து உலகெங்கும் படர்ந்தவர்கள் தமிழர்கள் என்றும், தமிழ் சொற்கள் உலகின் பல மொழிகளிலும் கலந்து இருப்பதாகவும் பல ஆராய்ச்சி கூறுகள் குறிப்பிடுகின்றன. ஆத்திக புராணங்களில் கூட உலக ஐம்பத்தாறு தேசங்களில் திராவிட தேசம் என்று ஒன்று குறிப்பிடப்படுகிறது. கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் இந்நான்கினையும் இணைத்த்து வட இந்திய இந்துத்துவா பாசிச சக்திகளுக்கு எதிராக தென் இந்திய சக்திகளை ஒன்று திரட்டவே பெரியார் அண்ணா போன்ற பழைய சிந்தனைவாதிகள் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தினார்கள், மற்ற மூன்று மாநிலத்தவரும் திராவிடம் என்ற குடையின்கீழ் இணையாமல் போனது வேறு வரலாறு.

திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் குமரில பட்டர் என்பவர் ஆவார், திரை என்றால் அலை, விடம் என்பது இடம் என்பதை குறிக்கும், திரையிடம் என்பது காலப்போக்கில் திராவிடம் என்பாதாக மருவி இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட ஆராய்ச்சியின் முடிவு, கடலும் கடல் அலைகளும் சூழ்ந்த ஒரு நிலப்பரப்பையே திரையிடம் என்று அக்காலத்தில் கூறுவார்கள், அப்படி கூறப்பட்ட நிலப்பரப்புதான் இன்று கடலுக்குள் மூழ்கி இருக்கும் தமிழர்களின் குமரிக்கண்டம் என்பதாகும், ( திரைகடல் = அலைகடல் ) அலைகடல் சூழ்ந்த ஒரு நிபரப்பில் தோன்றிய இனம் திராவிட இனம்.

18 ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் போன்ற மொழிகள் சமஷ்கிருத மொழொயில் இருந்து உருவானதாக பல அறிஞர்கள் கருதினார்கள், இதற்கு காரணம் சமஷ்கிருத மொழி தென் இந்திய மொழிகளில் அதிக அளவிலான ஊடுருவலே ஆகும்.

பதினெட்டாம் நூற்றாண்டிற்கு பிறகான காலங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் இவைகள் தனி ஒரு மொழிக்குடும்பத்தை சார்ந்தவை என்றும், இவைகளே தென் இந்திய மொழிகள் எனவும் பிரான்சிஸ் எல்லீஸ் என்பவர் தனது ஆராய்ச்சியின் மூலம் முன்தான் முதலில் குறிப்பிட்டார்.

அதன் பிறகு ஹோக்கன் , மார்க்ஸ் முல்லர் போன்ற மொழியியல் அறிஞர்கள் மால்தோ, தோடா, கோண்டி போன்ற மொழிகளும் தமிழ்மொழி குடும்பத்தை சார்ந்தவை என்றும் இவைகள் ஆரிய மொழிகளில் இருந்து மாறுபட்டவை என்றும் குறிப்பிட்டார்கள்.

1856 ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை என்றும் தமிழ் மொழியே தென் இந்திய மொழிகளுக்கு வேர் என்றும் கால்டுவெல் என்ற அறிஞர் குறிப்பிட்டார். 

தென் திராவிட மொழிகள் 9 என்றும், நடு திராவிட மொழிகள் 12 என்றும், வட திராவிட மொழிகள் 3 என்றும் ஆக மொத்தம் திராவிட மொழிகள் 24 என்று ஆராய்ச்சி அறிஞர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள், ஆனால் தற்பொழுது எருக்கலா, தங்கா, குறும்பா, சோழிகா ஆகிய நான்கு மொழிகளும் திராவிட மொழி குடும்பத்தை சார்ந்தவை என்று தற்கால ஆய்வில் தெரிய வந்துள்ளது, எனவே திராவிட மொழிக்குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை அல்லது தமிழ் மொழிக்குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆகா உயர்ந்து இருக்கிறது.

இப்படி இருக்கையில் திராவிடம் என்பதை வெறும் அரசியலாக மட்டுமே பார்த்து பேசுவது முறையாகாது, அன்றைய அரசியல்வாதிகளும் அறிஞர்களும் திராவிடம் அறிந்து திராவிடம் பேசினார்கள், இன்றைய அறிவாளிகள் திராவிடமும் அறியாமல் ஆரியமும் அறியாமல் எதை எதையோ குதறி துப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

தென் இந்தியாவையும், ஈழத்தையும் இணைக்கும் சொல் திராவிடம், தென் இந்தியாவின் நான்கு மாநிலங்களையும் இணைக்கும் சொல் திராவிடம், தென் இந்தியாவை தனியொரு நாடாக கருதத் தோன்றினால் அது திராவிட தேசமாக இருக்கும் என்று பெரியார் அண்ணா போன்றவர்கள் கருதியே அரசியல் பயணம் தொடர்ந்தார்களோ என்னவோ, ஆனால் திராவிடம் என்பது அருவருக்கத்தக்க வார்த்தை அல்ல .

திராவிடம் என்பதை அரசியல் என்ற குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்கின்றவர்களும் , மதம் என்ற மடமையின் தலையில் நின்று பார்ப்பவர்களும் தவறாகத்தான் பேசுவார்கள், திராவிடம் என்ற சொல்லை தந்தை பெரியாரோ பேரறிஞர் அண்ணாவோ உருவாக்கியது அல்ல, அவர்களுக்கு முன்பே அது இருந்தது, பெரியாரும் அண்ணாவும் ஆரிய பார்ப்பன ஊடுருவலையும் , சாதிமத கொடுமைகளையும் வேரறுப்பதற்கு தென் இந்தியா ஒன்றிணைய வேண்டும் என்பதை அவசியமாக கருதினார்கள்.

பெரியார் போன்ற போராளிகள் ஆரியத்தை மூர்க்கமாக எதிர்க்காமல் விட்டிருந்தால் இன்று தமிழ் வரலாற்றை நாம் தொலைத்து இருப்போம், நமது இலக்கியங்களும் இலக்கணங்களும் சிதறடிக்கப்பட்டு இருக்கும், நமது மொழியையும் அதன் தொன்மையையும் மறந்துதான் போய் இருக்க வேண்டும். 

அன்புள்ள அறிவாளிகளே திராவிடம் என்பதை மற்ற மாநிலத்தவர்கள் மதிக்காமல் மறந்திருக்கலாம், ஆனால் அவர்களுக்கெல்லாம் நாம்தான் வேர் என்பதை யாராலும் மறுக்க முடியாது, எனவே திராவிடம் என்ற சொல்லின் வரலாறு அறியாமல் அதை அவமானப்படுத்தாதீர்கள்.


                                                                          -------------- நிலாசூரியன் தச்சூர்.

2 கருத்துகள்:

  1. திராவிடம் என்று ஒரு ஒப்புமைக்காக சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு இனம் என்பது உலகெங்கும் அதன் மொழியாலேயே வரையறுக்கப்படுகிறது. தமிழரிலிருந்து பல நூறாண்டுக்குகளுக்கு முன்பே பிரிந்து தமக்கென நிலம் அமைத்து தமக்கென தனியே மொழி அமைத்து வாழ்ந்துவரும் இனங்கள் அதன் மொழியாலேயே அழைக்கப்படும். இப்படி தமக்கென தனித்துவமான வாழ்வியலில் அமைத்துக்கொண்ட பல இனங்களை ஒன்றெனக் கூறுவதே தவறு. தமிழிலிருந்து பிரிந்து வளர்ந்து தனித்தனி இனமாகி நிற்கும் மொழிகளே தமக்கென தனியான நிலம் பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, தமிழினம் தம் மண்ணின் ஆட்சி அதிகார உரிமையை பிற இனத்தாருக்கு விட்டுவிட்டது தமிழுக்கும் தமிழருக்கும் மிகக்கேடு. அதை இன்றைய தமிழரின் நிலை உணர்ந்தும். திராவிடம் என்ற சொல் முற்காலத்தில் நல்ல நோக்கோடு கூறப்பட்டிருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் தமிழரை ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை பிற இனத்தார்கள் பரிக்கவே பயன்படுகிறது. ஆதலால் அந்த சொல் வழக்கொழிந்து, தமிழர் என்ற அடையாளத்தோடே தமிழர் வாழட்டும். தமிழினம் தம் மண்ணில் உரிமையோடு வாழட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டுரையை முழுமையாக உள்வாங்க வேண்டும்,  திராவிட இயக்கங்கள் இல்லாமல் போயிருந்தால் இன்று தமிழகம் தமிழகமாகவே இருந்திருக்காது, நாம் மார்தட்டி தமிழ்த்தேசியம் பேசுவதற்கு வக்கற்று போயிருப்போம், தெற்கே ஒரு தாடிக்காரனும் வடக்கே ஒரு தாடி இல்லாவதனும் கொடுத்த தைரியம்தான் இன்று நமக்குள் கொஞ்ச நஞ்ச இன உணர்வு ஒட்டிக்கொண்டு இடுக்கிறது.
      திரையிடம்தான்  திராவிடம்,  இன்றும்கூட நமது நிலம் திரைகடல் நடுவேதான் இருக்கிறது, மற்ற தென் மாநிலங்கள் பிறப்பால் மொழியால், பண்பாட்டால், உருவத்தால் நம்மை ஒத்து இருக்கிறார்கள் அதனால் அவர்கள் நம்மை ஆள வேண்டும் என்று அர்த்தமல்ல, சேரசோழ பாண்டிய வரலாறு பேசுகிற தமிழ் தேசியவாதி அந்த காலத்தில் தமிழ் நிலம் எத்துணை தூரமானது அது எத்தகைய மக்களை உள்ளடக்கி இருந்தது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
      தமிழரை தமிழர்தான் ஆளவேண்டும் இதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது, எனது கட்டுரை தமிழை யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்று எப்பொழுதும் கூறவே  கூறாது.
      உங்கள் பார்வை மிகவும் குறுகி இருப்பதாக தோன்றுகிறது, இல்லையேல் திராவிடம் என்ற  சொல்லை திராவிட அரசியல் கட்சிகளோடு கலந்து பார்த்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன், 

      திராவிட அரசியல் காட்சிகள் உருவாவதற்கு முன்பே திராவிடம் என்ற சொல் உருவாகிவிட்டது அதனால் திராவிட அரசியல் கட்சிகளையும்  திராவிடம் என்ற சொல்லையும் முடிச்சி போட்டு திராவிடம் என்ற சொல்லை எதிர்ப்பது எத்தகைய அறிவாளித்தனம் என்றுதான் எனக்கு விளங்கவில்லை. (இங்கே அரசியல் தவிர்த்து திராவிடம் பேசுவது பலருக்கும் இயலாத காரியமாகிவிட்டது).
      திராவிடம் என்ற மரபு சொல்லை தற் கால திராவிட அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அதன் தொன்மையை ஆராய்வதால்  விரிவான கருத்தையும் விரிவான  விளக்கங்களையும்  அறியமுடியும் அதற்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட உணர்வும் நீளமானத் தேடலும் மிக அவசியம், ஏனென்றால் தமிழரின் வரலாறு சுறுக்கிப் பார்க்கின்ற அளவிற்கு சிரியதல்ல, அரசியல் தமிழர் வரலாற்றில் ஒரு சிறு பகுதிதான் ஆனால் அதுவே தமிழரின் முழு வரலாறு அல்ல.
      நமது வரலாற்றை நாம் சுருக்கி பார்த்து அதுதான் நமது வரலாறு என்று அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது வரலாற்றுக்கு நாம் செய்யும் துரோகமே அன்றி வேறில்லை.
      ஒருத் தமிழன் தன்னை திராவிடன் என்று சொல்லிக்கொள்வதால் அவன் வேறு மாநிலத்திற்கு சொந்தக்காரன் என்றோ, தற்கால திராவிட அரசியலுக்கு சொந்தக்காரன் என்றோ, தன்னை மற்ற மாநிலத்தவர்கள் ஆளவேண்டும் என்ற சிந்தனைகளெல்லாம் இருக்குமென்றோ  நினைப்பீர்களேயானால் அது உங்கள் பார்வை கோளாறாகத்தான் இருக்க முடியும்.
      என்னை தமிழ் தேசியவாதி ஆக்கியதே ஆதி திராவிடம்தான்,
       
      -- வரவிற்கு நன்றி 

      நீக்கு