ஞாயிறு, 15 ஜனவரி, 2023

சூரிய வணக்கம்

 

 

ஓ... பெரியவனே,

உயரத்தில் ஒளிர்பவனே 

உம்மை வணங்குகிறோம் 


உன் கருணையால், எங்கள் 

வாழ்க்கை செழிக்கிறது 

உமது ஒளிவிரல்களின் தழுவலினால் 

இந்த உலகம்  வெளுக்கிறது 


நீரின்றி அமையாது உலகாம் 

நீயின்றி ஏதிந்த உலகு?


மழையும் வெயிலும் 

நீ கொடுத்தாய் 

இதோ...

பாலும் பழமும் 

தேனும் தினையும்  

கரும்பும் சோறும் 

உமக்கே முதல் படையல் 


வா...


எங்கள் அறுவடைத்திருநாளின் 

அதிகார நாயகனே வா 


நானூற்றறுபதுகோடி 

ஆண்டுகளுக்குமுன்பே இந்த 

பூமியை படைத்து 

மரம்செடிகொடிமுதல் 

பல்லுயிர்த் தோன்றக் 

காரணமாய் இருந்தவனே 

நீயல்லோ எங்கள் முதல் தெய்வம் 


ஆதிபகலவனே 

அழகான கதிரவனே - எங்கள்    

வணக்கங்களை ஏற்று 

எங்கள் வாழ்வை வளப்படுத்து.


----- நிலாசூரியன் தச்சூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக