வியாழன், 9 மார்ச், 2023

எனது நண்பன் சகாவின் படுகொலைச் சம்பவம்


ஒவ்வொரு தனிமனிதனின் இறந்தகால வாழ்க்கைதான் அவனது நிகழ்கால வரலாறாக பார்க்கப்படுகிறது, நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும், காலம் நம்முள் தவறாமல் பதிவு செய்து கொண்டுதான் இருக்கிறது,  எனது இறந்த காலம் என்னுடனேயே இறந்து போகாமல் இருப்பதற்கு,  என் வாழ்வில் காலம் பதிவு செய்த பல்வேறு நிகழ்வுகளில், 1995 ஆம் ஆண்டு நடந்த ஒரு சிறு உண்மை நிகழ்வோடு கற்பனையை புனைந்து இந்த கதையை எழுதுகிறேன், இந்த கதை நகர்வில் என்னையே ஒரு‌ அங்கமாக இணைத்து, கதை சொல்லி போல் காட்ட முயர்ச்சித்து இருக்கிறேன். 


 சகாதேவனும் நானும் மிக நெருங்கிய நண்பர்கள், நெருங்கிய நண்பர்கள் என்றால் சாதாரணமானது அல்ல,  மிக பெரிய பாச பிணைப்பு எங்களது உறவு, வீட்டில் மட்டுமல்ல ஊரில் உள்ளவர்களும்கூட எங்கள் நட்பை கண்டு ஆச்சர்யப்படுவார்கள், அந்த அளவிற்கு எங்கள் பாசப்பிணைப்பு  மேலோங்கி இருந்தது. பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் அளவிற்கு சகா மிகவும் அழகாக இருப்பான், மிகவும் திடமான உடற்கூறு அவனுக்கு, அதனாலேயே எங்கள் ஊரில் அவன்மீது பலர் கண் வைத்தார்கள், எங்கள் தெருவில் உள்ள அவனது தோழர்களுக்கும் தோழிகளுக்கும் அவன் ஒரு தலைவனாக இருந்தான்,  அவனது தோழர்களும் தோழிகளும் அவனிடம் மிகவும் பணிவாகவும் பாசமாகவும்  நடந்துகொள்வதை நான் பலமுறை பார்த்து இரசித்து இருக்கிறேன், அப்பொழுது எல்லாம் சகாவை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும். 

சகாவின் தோழிகள் பலர் சகாவை தங்கள் காதல் வலையில் வீழ்த்த முயன்று இருக்கிறார்கள்,  ஆனால், சகா அதற்கெல்லாம் ஒருபோதும் இசைந்ததில்லை, அவன் எங்கள் வீட்டிற்கும் எதிர்வீட்டில் இருந்த பானுவை  உயிருக்கு உயிராய் காதலித்தான்,  அதனாலேயே சகா மற்ற தோழிகள் வீசிய காதல் வலையை ஊடறுத்து பானுவை மட்டுமே நெஞ்சில் தாங்கி, உண்மையான காதலோடு வாழ்ந்தான். 

பானு, சகா, இவர்களின் காதல் மிகவும் புனிதமானது என்றுதான் சொல்ல வேண்டும், ஒவ்வொரு நாளும் அவர்களின் சந்திப்பும் காதல் கலவிகளும் மிகவும் சுகமானதாகவும், சுவராசியமானதாகவும், வியப்பிற்குரியதாகவும் இருந்தது, எங்கள் வீட்டின் அருகே உள்ள வேப்ப மரத்தடியில்தான் அவர்கள் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வார்கள், அந்த வேப்பமரம் இன்றும் இருக்கிறது, ஆனால், எனது ஆருயிர் நண்பன் சகா என்னை விட்டு எங்கோ போய்விட்டான் என்று எண்ணும்பொழுது, நெஞ்சம் வேதனை அடைகிறது. 

 என் நேசிப்பிற்குரிய  நண்பன் சகா இன்று உயிரோடு இல்லை என்பதை என்னும்பொழுது மனது கணமாகி கண்கள் குளமாகிறது, அவன் தானாக சாகவில்லை, பொல்லாத கொடிய மனிதர்களால் படுகொலை செய்யப்பட்டான் என்பதுதான் உண்மை,  அப்பொழுது அவனை காப்பாற்ற சொல்லி கடவுளிடம் கையேந்தினேன் அது பயனற்று போகவே, அன்றுதான் கடவுளை கல்லென்று வசைமொழிந்தேன். 

சகா படுகொலை செய்யப்பட்டபொழுது எனக்கு வயது பதினான்கு,  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவன், ஆதலால்,  வலியோர்களிடமிருந்து சகாவை காப்பாற்ற கடுமையாகப் போராடி தோல்வியில் விழுந்தேன்,  எதிரிகள் எவ்வளவு பெரிய பலசாலிகளாக இருந்தாலும் கூட  சகா எளிதாகவும் இலகுவாகவும் தாக்கி வீழ்த்திவிடுவான்,  இதனாலேயே அவனை எதிர்க்க அவனது வட்டத்தில் எல்லோரும் பயந்தார்கள், தன்னம்பிக்கையும் தைரியமும்  அவனுக்கு மிக பெரிய ஆயுதமாக இருந்தன, கருப்பும் சிவப்பும் மஞ்சளும் கலந்த அவனது உருவம்,  ஓவியமாய் உள்ளத்தில் இன்றும் பதிந்திருக்கிறது. அவன் சிறு வயதில் இருந்தே எனக்கு நெருங்கிய நண்பனாகிப் போனான், எனது குரலை கேட்டால் எங்கிருந்தாலும் ஓடிவந்துவிடுவான், என்னுடைய தொடையில்  அமர்ந்துகொண்டு என்னுடன் பேசுவது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று என்றே சொல்லலாம், விடிந்துவிட்டது எழுங்கள் என்று எல்லோரையும்  முதல் ஆளாய் தட்டி எழுப்பும் அவனது பணி மகத்தானது.

 சகா மிகவும் அன்பானவன்,  அவனுக்காக வைக்கும் சாப்பாட்டை அவன் தனியாக சாப்பிடுவதில்லை, அவனது காதலி பானுவை எங்கிருந்தாலும் ரகசியமாக  கூப்பிட்டு அவளோடு  இணைந்து சாப்பிடுவதுதான் அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று, இதை கண்டு நானே பலமுறை மெய்சிலிர்த்து போயிருக்கிறேன். 

நான் பள்ளிக்கு செல்லும்பொழுதுகூட என்னை பிரிய மனமின்றி,9 என் மிதி வண்டியில் ஏறி அமர்ந்து கொள்வான், வலுகட்டாயமாக இறக்கிவிட்டுவிட்டு  செல்வேன், அப்பொழுதும்கூட சிறிதுதூரம் எனது பின்னாலேயே வருவான். 

 ஒரு நாள் நான் தோட்டத்திற்குச் சென்று மாட்டுக்கு சோளத்தட்டை கொண்டு வந்து,  வீட்டு வாசலில் போட்டு துண்டு துண்டாக வெட்டிக்கொண்டு இருந்தேன்,  எனது அருகில் சகாவும் பானுவும் நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள், நான் ஒரு பிடி தட்டையை எடுத்து துண்டு துண்டாக வெட்டிவிட்டு அடுத்த பிடியை அள்ளப் போனேன் உடனே சகா ஒரே கத்தாக கத்திக்கொண்டு ஓடிவந்து  நான் அள்ளப்போன அந்த சோள தட்டைகுள்ளிருந்த ஒரு கட்டுவிரியன் பாம்பைக் கொன்று என்னை காப்பாற்றினான், ஆனால் அவனைத்தான் என்னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

 அன்று நிறைந்த வெள்ளிகிழமை, சகா சாமிக்கு நேந்துவிட பட்டவனாம், அதனால் இன்று அவனை குலசாமிக்கு காவு கொடுக்க போகிறார்களாம்.... அப்பா இந்த விடயத்தை சொன்னதும் என் மனது பக்கென்று தூக்கிவாரி போட்டது, மனதில் துக்கம் வந்து குடிகொண்டது, சகாவை கொலை செய்ய போகிறார்களா? இது என்ன அநியாயம்,  மனதிற்குள் குழம்பி அழுதேன், கரை உடைந்த காட்டாறாய் கண்கள் உடைந்து வெள்ளப்பெருக்கானது, 

 சகாவை கொல்ல வேணாம்பா, பாவம் அவன விட்டுடலாம் என்று அப்பாவிடம் அழுதுகொண்டே சொன்னேன். 

இல்லபா அது சாமிக்கு நேந்துவிட்டது நேர்த்திகடன் செய்யலன்னா சாமி குத்தம் ஆயுடும், நீ  தயாராகு கோவிலுக்கு கெளம்பலாம்  என்று சொல்லி அப்பா நகர்ந்தார், எனக்கு மேலும் அழுகை அதிகரித்தது, நேராக அம்மாவிடம் சென்று, அம்மா சகாவை கொல்ல வேணான்னு அப்பாகிட்ட சொல்லுமா, அவனையும் உன் பிள்ளை மாதிரிதானே வளர்த்த,  பாவம்மா அவன்,  விட்டுட சொல்லுமா... அழுதுகொண்டே அம்மாவிடம் கெஞ்சினேன், இல்ல தங்கம்,  அது சாமிக்கு நேந்துவிட்டது, நேர்த்திகடனை செய்யாம விட்டுட்டா தெய்வகுத்தம் ஆயுடும்... என்று என்னை பெற்ற எனது தெய்வம் இரக்கமே இல்லாமல் சொன்னது. 

வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு கிளம்பிக்கொண்டு இருந்தார்கள், நான் சகா என்று அழைத்தேன் சகா ஓடி வந்தான், அவனை தூக்கி எடுத்து மார்போடு அணைத்து  முத்தமிட்டேன், தான் சாகபோகிறோம் என்றுகூட தெரியாமல் அவன் சிரித்தான்.

 சகாவை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்திற்குச் சென்றேன், வைக்கோல் போருக்கு அடியில் அவனை அனுப்பிவிட்டு, டேய் உன்னை கொல்ல போறாங்க இங்கேயே ஒளிஞ்சிக்கோ, எக்காரணம் கொண்டும் வெளியே வராதே என்று சொல்லிவிட்டு வந்தேன். 

அவன் எனது பேச்சை கேட்காமல் மீண்டும் மீண்டும்  வெளியே வந்தான், எனக்கு கோபம் வந்துவிட்டது,  அவனை தலையில் ஒரு கொட்டு வச்சி மீண்டும் வைக்கோல் போருக்கடியில் விட்டு வெளியே வந்த அடி பிச்சுபோடுவேன் என்று திட்டிவிட்டு வந்தேன், பிறகு அவன் வெளியே வரவில்லை. 

வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு கிளம்பிவிட்டார்கள், எங்கே சகாவை காணும் கூப்பிடு என்றார் அப்பா,  உடனே அம்மா சகா... என்று  குரல் கொடுக்க, அம்மா அன்பாக கூப்பிடுகிறார்கள் என்ற சந்தோசத்தில்  கத்திகொண்டே  ஓடிவந்தான் அந்த கிறுக்கு பய புள்ள. 

டே முட்டாப்பயலே, ஏன்டா வந்த? இது அம்மா இல்லடா கொலைகாரி என்றேன், அவன் நான் சொல்வதை காதில் வாங்காமல் அம்மாவை கொஞ்சிக்கொண்டு இருந்தான்.

 எல்லோரும் கோவிலுக்கு கிளம்பினார்கள், அப்பா அம்மாவின் மிகுந்த வற்புறுத்தலக்கு பிறகு நானும் அவர்களுடன் சென்றேன்,  அப்பா சகாவை அழைத்துக்கொண்டுச் சென்றார், இன்று ஏதோ விசேசம் போல் இருக்கிறது என்ற சந்தோசத்தில் சகா அப்பாவோடு சென்றான், அவனுக்கு எப்படி தெரியும்? விசேசமே அவனை கொலை செய்ய போவதுதான் என்று.....?  நான் அப்பாவின் அருகில் சென்று, அப்பா வேண்டாம்பா அவன விட்டுடுங்கப்பா,,,  அவன கொன்னா  நமக்கு பாவம்தாம்பா வரும்,  புண்ணியம் கிடைக்காதுப்பா, எந்த சாமியும் உயிர்பலி கேட்காதுப்பா, அப்படி கேட்டா அதுக்கு பேரு சாமியே இல்லப்பா, அவன விட்டுடுங்கப்பா என்றேன், பெரியார் பேரன் வந்துட்டான்  பெத்தவனுக்கே பாடம் சொல்ல! இது எல்லாம் வழக்கமா நடப்பதுதான் நீ பேசாம வாப்பா என்று அப்பா சொல்ல, சகாவை காப்பாற்றும் முயற்ச்சியில் மீண்டும் படுதோல்வி அடைந்தேன்.

 கோவிலில் பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் நடந்துகொண்டு இருந்தது, சகாவை பறிகொடுக்கபோகிறோம் என்ற மேலோங்கிய வருத்தத்தில் நான் ஒதுங்கி நின்றுகொண்டு இருந்தேன், எனது அருகில் கழுத்தில் மல்லிகைபூ மாலைபோட்டுகொண்டு வண்ண வண்ணமாய் பொட்டு வைத்துகொண்டு சகா நின்றுகொண்டு இருந்தான், நான் அவனை பிடித்துத் தூக்கினேன் டேய் இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ சாகபோற என்னால உன்னை காப்பாற்ற முடியல, முடிஞ்சா தப்பித்து ஓடி போய்டு என்று அவனை தூரத்தில் தள்ளிவிட்டேன்,  இதை பார்த்த அம்மா இவனுக்கு கிறுக்கு புடிச்சி போச்சி என்று என்னை திட்டினார்கள், சகா மீண்டும் என் அருகிலேயே வந்து நின்றான். 

பூசாரி சூரி கத்தியை கையில் வைத்து கொண்டு பலியிடுதற்கு தயாரானார், அப்பா சகாவைத் பலி பீடத்திற்கு கொண்டுச் செல்ல, அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல், மனம் ஓவென கதறி அழுதது, சகா சாகபோவதை என் கண்ணால் நான் எப்படி காண முடியும்? அதை எப்படி என்னால் தாங்க முடியும்?  பட்டென கோவிலில் இருந்து வெளியேறினேன், எங்கப்பா போற இரு சாமி கும்பிட்டுட்டு போகலாம் என்று அம்மா சொல்வதை பொருட்படுத்தாமல், ஒரு உயிரை பலிகொடுத்து அதில் கிடைக்கிற சாமி பாசம் எனக்குத் தேவையில்லை என்று எண்ணியவாறே வேகமாக நடந்தேன். 

 அம்மா ஓடி வந்து என் கையை பிடித்தார்கள், என்னை விடு நான் போறேன் என்று அழுதேன், அம்மா என்னை விடவில்லை, அம்மாவின் பிடியில் இருந்து எப்படியோ திமிறி விடுபட்டு விலகினேன், அப்பொழுது பக்கத்தில் இருந்த இரண்டு பெரியவர்கள் என்னை பிடித்தார்கள், அவர்களின் பிடியில் இருந்து என்னால் மீள முடியவில்லை, பதினான்கு வயது சிறுவன் அல்லவா,  என்ன செய்ய? விடுங்கடா கொலைகார சண்டாள பாவிகளா, என்று கூறி கதறி அழுதேன், எனது கதறலைக் கண்டு மனமிரங்கி  அவர்கள் என்னை விட்டுவிட்டார்கள். 

வேகமாக வீடு வந்து கயிற்றுக் கட்டிலில் குப்புற படுத்து தலையணையை கண்ணீர்கொண்டு நனைத்தேன், இந்நேரம் என் சகா செத்திருப்பான், அவனை வெட்டி கொலை செய்து இருப்பார்கள் என்று எண்ணும்பொழுதே அழுகை தேம்பலாக மாறியது,  அன்று இரவெல்லாம் உறங்கவே முடியவில்லை, சகாவின் நினைவுகள் பைத்தியமாக்கி கொண்டு இருந்தது, நாளையிலிருந்து சகாவோடு விளையாட முடியாது, குடும்பத்தில் ஒருத்தனாக இருந்த சகாவை குடும்பமே சேர்ந்து கொலை செய்கிறதே இது எத்தகைய கொடியப் பண்பு என்று நினைக்கும்பொழுது  உள்ளம் குமுறியது.

 தினமும் உறங்கிக்கொண்டு இருக்கும் ஊரை இனி யார் எழுப்புவார்கள் என்றுத் தெரியவில்லை, இனி எந்த விடியலும் சகாவின் குரலை பதிவு செய்ய போவதில்லை, நேற்றைய இரவு திரும்பவும் இன்று வரப்போவதில்லை, என்னுள் எழுந்த சோக நினைவுகளுனூடே எப்படி உறங்கினேன் என்று தெரியவில்லை, விழித்தப்பொழுது சூரியன் உதித்து இருந்தது, வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தேன், வேப்ப மரத்தடியில் பானு நின்றுகொண்டு இருந்தாள், நான் அவளை பார்த்தேன் அவள் சிறு சத்தம் போட்டவாறே என்னை பார்த்தாள், அந்த சத்தமும் பார்வையும் எங்கே என் சகா என்று அவள் கேட்பதை நான் புரிந்துகொண்டேன், ஆனால், அவளுக்கு நான் என்ன பதில் சொல்வது, எப்படி சொல்லி புரியவைப்பது என்று எனக்குத் தெரியவில்லை, அவளை நினைத்தால் மிகவும் வேதனையாக இருந்தது.  

அன்று முழுவதும் அவள் அந்த வேப்பமரத்தடியை விட்டு நகரவே இல்லை, அவளுக்கு நான் சாப்பாடு கொடுத்தேன் அதை அவள் உண்ணவில்லை, ஒரு நாள் முடிந்தது, மறு நாளும் அவள் அதே மரத்தடியில் நின்றுகொண்டு சகாவை தேடினாள், அவள் முகத்தில் தன் காதலனை காணவில்லையே என்ற பெருத்த சோகம் குடிகொண்டு இருந்தது, உடல் சோர்வுற்ற நிலையில் அவள் இருந்தாள். 

பாவம் அவள் என்ற பரிதாபத்தோடு என்னால் கடந்துச்செல்ல முடியவில்லை.

 அவளிடம் எப்படி சொல்வேன்,  உன் சகாவை பல கயவர்கள் சோர்ந்து படுகொலை செய்துவிட்டார்களென்று,

 "என்னால் முடியாது,"

 "நிச்சயம் முடியாது," தயவுசெய்து நீங்களே அவளிடம் சொல்லிவிடுங்கள். 


 முக்கியக்குறிப்பு;
-----------------------------
சகாதேவன் என்கிற ''சகா'' நான் செல்லமாக வளர்த்த எனது சேவலின் பெயர். 

''பானு'' எங்கள் வீட்டின் எதிர்வீட்டில் பூங்காள் ஆயா வளர்த்த பெட்டைகோழிக்கு கதைக்காக  நான் வைத்த பெயர்.

2012 ல் எழுதியது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக