வெள்ளி, 5 ஏப்ரல், 2024

இது தேர்தல் காலம்

 


ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை இந்திய அரசியல் அமைப்பு வழங்கி இருக்கிறது. வாக்களிக்கும் உரிமையை பெற்ற ஓர் இந்தியக் குடிமகனாக நான் எனது கருத்துக்களை கூறுகிறேன், இதை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கும் முரண்படுவதற்கும் வாக்காளர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. 


டிஜிட்டல் இந்தியா என்று சொன்னீர்கள், அனைவருக்கும் ஆதார் அட்டை அவசியமானது, ரேசன் அட்டை ஸ்மார்ட் கார்டு ஆனது, அனைத்து வேலைகளும் கணினிமயமாகி முழு இணையதள மயமானதால் எந்த ஒரு சிறு வேலைக்கும் கடவுச்சொல் கடவுஎண் என்ற நடைமுறை தவிர்க்க இயலாததாகிவிட்டது, அதனால் கைப்பேசி அனைவருக்கும் கட்டாயமாகிப்போனது. 

வீட்டில் அரிசி இருக்கிறதோ இல்லையோ... கடனை உடனை வாங்கி மாதம் இருநூறு முன்னூறுக்கு கைப்பேசி இணைப்பை நாம் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறோம், இதனால் செல்போன் சிம்கார்டு இணையதள இணைப்பு போன்றவற்றை விற்பனை செய்கிற தனியார் நிறுவனங்கள் தாராளமாக நமது உழைப்பை சுரண்டித் தின்று கொழுத்துக்கொண்டு இருக்கின்றன. 

இது ஒருபுறம் இருக்க... தேர்தல் முறையும் டிஜிட்டல் மயமாகி வருகிறது, (EVM) என்று சொல்லக்கூடிய எலக்ட்ரானிக் வோட்டர் மெஷின் அதாவது மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது, இதற்காக தேர்தல் ஆணையம் பல கோடிகளை செலவு செய்து தேர்தலை நடத்துகிறது. வாக்காளர்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் வெகு தொலைவு நகரங்களில் இருந்தும் தொடர் வண்டி பேருந்து போன்ற வாகனங்களில் இடிபாடுகளுக்கு இடையில் மிகவும் சிரமப்பட்டு குடும்பத்தோடு தங்கள் சொந்த கிராமத்திற்குச் சென்று அங்கு வாக்குச் சாவடிகளில் கால்கடுக்க மணிக்கணக்கில் நின்று வாக்களித்து தங்கள் ஐனநாயக கடமையை ஆற்றுகிறார்கள். 

இதன் பிறகுதான் வாக்கு பதிவு செய்யப்பட்ட EVM இயந்திரங்களை எல்லாம் இயந்திர வண்டியில் ஏற்றிச் சென்று அவைகளை எல்லாம் ஓர் இடத்தில் வைத்து அதற்கு நான்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு உண்டாக்கி சில நாட்கள் கழித்து தேர்தல் ஆணையத்தால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த தேர்தல் நடைமுறையில் EVM இயந்திரத்தை கைவிட மறுக்கும் தேர்தல் ஆணையம் EVM இயந்திர தேர்தல் முறையை முழு டிஜிட்டல் மயம் ஆக்கினால் என்ன என்பதுதான் எனது கேள்வி, ஏனெனில் EVM இயந்திர வாக்குப்பதிவு முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாக பலரும் கருதுகிறார்கள், அப்படி இருக்கும் சூழலில் பொதுமக்களுக்கும் வாக்காளர்களுக்கும் தங்கள் மீது முழு நம்பிக்கையை வரவைக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். 

விரும்பவில்லை என்றாலும்கூட இந்த டிஜிட்டல் இந்தியாவில்தான் நாம் எப்படியும் வாழ்ந்தாக வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது அதனால் EVM இயந்திர வாக்களிப்பு முறைக்கு இன்னும் அப்பாற்பட்டு அது முழு டிஜிட்டல் மயம் ஆக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அனைவரும் அவரவர் வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடியே தங்கள் கைப்பேசி அல்லது கணினி மூலம் வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் உருவாக்கி தருமேயானால் தேர்தல் நடத்துவதற்கான சிரமங்களும் செலவுகளும் மிகவும் குறைய வாய்ப்பிருக்கிறது மேலும் வாக்காளர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் வெகுவாக குறையும் என்று நான் நம்புகிறேன். இதில் விரைவாக தேர்தல் முடிவுகளை வெளியிடுவதோடு வெளிப்படைத் தன்மையையும் தேர்தல் ஆணையத்தால் உறுதிசெய்ய முடியும். அதோடில்லாமல்
இது தேர்தல் நடைமுறையில் மாபெரும் புரட்சியாகவும்  அடுத்தகட்ட நகர்வாகவும் அமைய வாய்பிருக்கிறது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். 

----- நிலாசூரியன் தச்சூர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக